சீவக சிந்தாமணி.
நூலாசிரியர் அறிமுகம் :
ஐம்பெருங்
காப்பியத்தில் ஒன்றான செந்தமிழ்
காப்பியம் இது. ஜைன ஆச்சாரியர்கள் சார்ந்திருந்த
பல சங்கங்களில் ஒன்று
திரமிள சங்கம்.
இச்சங்கத்தில் சிறந்து விளங்கியது
நந்தி கணம். இந்த நந்திகண
அருங்கலான்வயத்தோர் பன்மொழிப்புலவர்கள். இத் திரமிள சங்க, நந்திகண, அருங்கலான்வயத்தை சேர்ந்தவர்
தான் திருத்தக்கதேவர்.
சோழ குடியைச்
சேர்ந்த திருத்தக்கதேவர், மதுரை சென்ற போது, அங்குள்ள தமிழ்ப்
புலவர்கள், தேவரிடம், உம் சமயத்தோர் துறவறம்
பாட வல்லவரே அன்றி,
இன்பம் தோன்றும் அகப் பொருட்சுவை ஏந்திய
பாடல்களைப் பாட அறியாதவர்கள்
என கூற, தேவர் சமணப் புலவர்கள்,
காதற் சுவையும் பாட வல்லவர்கள் என கூறி, அவர்கள்
கேட்டுக் கொண்டதற்கு எழுதிய
நூலே ஜீவகசிந்தாமணி.
மதுரை நிகழ்ச்சியை
தேவர் தன் குருவிடம்
கூற, குருவோ, இவரது திறமையை உலகறியச்
செய்ய, முதலில் அங்கு குறுக்கே ஓடிய நரியை பற்றிய ஒரு நூல் எழுதச்
சொல்ல, தேவர், சமணக் கொள்கைகளை உள்ளடக்கிய
நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றினார். வியந்து,
மகிழ்ந்த குரு, “ செம்பொன்
வரை மேல் “ என்ற வரி துவக்கத்தில்,
கடவுள் வாழ்த்துடன், ஜீவகன்
வரலாற்றை அகப் பொருட்சுவை
தளும்பும் காவியமாக இயற்றுக
எனப் பணித்தார்.
தேவரும், ஆசிரியர்
வரிகளுடன், தானும் சித்தர்
வணக்கத்திற்காக, “மூவா
முதலா” என்னும் தொடக்கத்துடன்
செய்யுள் அமைக்க, மாணாக்கரின்
செய்யுள் சிறப்பென்று கூறி, அவர் பாடலையே
முன் வைத்து எழுதச்
சொன்னார். அதனால் தான், இந்நூலில் சித்தர்
வணக்கம் முன்னிலும், அருகர்
வணக்கம் பின்னிலும் அமைந்தது.
திருத்தக்கதேவர், இந்நூலை
எல்லாச் சுவைகளும் சிறப்புடன்
அமைத்து, எட்டே நாட்களில்
முடித்து, மதுரையில், அரங்கேற்றி,
அனைவராலும் பாராட்டப் பெற்றார்.
அழுக்காறுடைய சிலர், அகப்பொருட்
சுவை உச்சம் கண்டு,
அந்நுகர்ச்சி பெற்றாலன்றி, இந்நூல்
எழுதயிலாதென்றனர். தேவரோ பெரும்
நெருப்பை கையில் ஏந்தி தன் தூய்மையை
அறியச் செய்தார். இவர் காலம் ஒன்பதாம்
நூற்றாண்டு. தேவரின் வர்ணனைகளில் நான் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக
தான் கையாள முடிந்தது. இது கதையை தெரிந்து கொள்ள மட்டுமே,
எழுதியது என்பதால் 3145 செய்யுள்கள், 13 இலம்பகங்கள் கொண்ட காப்பியத்தை
மிகச் சுருக்கி கதையை மட்டும்
தெரிந்து கொள்ள முடித்துள்ளேன். தேவரின் கடவுள்
வாழ்த்தை அப்படியே தந்துள்ளேன்.
இனி நாம் ஜீவகசிந்தாமணி காப்பியத்தை
தொடர்வோம்.
கடவுள் வாழ்த்து :
சித்தர் வணக்கம்.
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒண்ணிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்த்தும் அன்றே.
அருகர் வணக்கம்.
செம்பொன் வரைமேல் பசும் பொன்னெழுத் திட்ட தேபோல்
அப்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும்திரு மூர்த்தி விண்ணோர்
அப்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்.
ஆசாரியர், உபாத்தியாயர், சாது வணக்கம்.
பண்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தோன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
சொன்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க
நன்மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்
அவையடக்கம்.
கற்பால் உமிழ்ந்த மணியம்கழு வாதுவிட்டால்
நற்பால் அழியும் நகைவெண்மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும்மதி யால்க மீஉவிப்
பொற்பா இழைத்து கொளல்பாலர் புலமை மிக்கார்
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கு முத்தும்
அந்நீர் உவர்க்கும் எனின்யாரவை நீங்கு கிற்பார்
இந்நீர என்சொல் பழுதாயினும் கொள்ப அன்றே
பொய்ந்நீர அல்லாப் பொருளால்விண் புகுதுமென்பார்
1.
நாமகள் இலம்பகம்.
நாட்டு வளம் :
செந்தமிழ் கலை அறிந்த செம்மாப்
புலவர்களும்
வெண்தாமரை அமர்ந்த
நாமகளும் திருமகளும்
கோணாத கோல் கொண்ட கொற்றவன்
மேல் காதலுடன்
குடிமக்கள் குடிகொண்ட
நாட்டின் வளம் நானுறைப்பேன் 1
செவ்விளநீர் காய் முற்றி மரம் துறக்கும் தென்னைகளும்
மது
சொட்டும் மலர்களை சிரம் கொண்ட கமுகுகளும்
பழம் வெடித்து
சுளை பிறக்கும் பலாமரத்
தோப்புகளும்
எப்போதும் எழில் கொடுக்கும் ஏமாங்கத நன் நாட்டுக்கு 2
வெண்மேக கூட்டங்கள்
விண்வெளியில் உலா வர – அவை
தாகத்தால் சமுத்திரத்தின் நீருண்டு
உடல் கருக
மோகத்தால் மதிமயங்கி
அவை மோதி ஒலி ஒளிக்க
மாதம் மும்மாரி
பெய்யும் ஏமாங்கத நாட்டினிலே 3
மலை மகளின்
கண்களிலே வெண்மதி போல் நீர் கொட்ட
மலருக்கு அலைகின்ற
வண்டினம் போல் தென்றல்
வர
மலர் கணையான்
கைத்திறத்தால் மங்கையரும் ஆடவரும்
ஏமாங்கத நாட்டினில்
தான் எப்போது மகிழ்ந்திருப்பர் 4
தேன் அருவி மலை இறங்கி
வான் வழி போல் கொட்டும்
இந்திரனின் மணிவடம்
போல் காண்பவர் கண் கட்டும்
வானரங்கள் கனி எடுக்க மந்தியுடன்
முட்டும்
ஏமாங்கத நாட்டினிலே
அழகு மிக சொட்டும் 5
வள்ளல்கள் கைசிவக்க
பொருள் அள்ளித் தருவது
போல்
மழை
வெள்ளம் மலை செல்வம்
அத்தனையும் உடன் ஏற்று
ஊர்தோரும் புரண்டோட
ஊர் மக்கள் பெரும்
இன்பம்
ஏமாங்கத நாட்டுக்கு
என்றென்றும் ஓர் சிறப்பு 6
வெள்ளம் எனும் கன்னிக்கு மென்முலை
போல் மணல் திட்டும்
மலையருவி சீர்தந்த
மற்ற அரும் பொருள்களுடன்
சிரம் வைத்து
கரம் பற்றி அலை கோர்த்த நுரை கொண்ட
கடல்
என்னும் கணவனுக்கு அவன் நுகர சென்றதங்கு 7
குத்தி மதம் அடக்கி களிறு வேட்டை ஆடுதல்
போல்
வெள்ளத்தின் வேகம் தணிய வாய்க்காலில்
படல்களிட
நற்குல மங்கையரின்
கற்பைப்போல் அவ்வெள்ளம்
ஏரி,
குளம், அணை என்று நீர்நிலைகள் நிறைந்தனவே 8
படலிட்டும் அடங்காமல்
பாய்ந்தோடும் நீர் ஒலியும்
கரை
காக்கப் போராடும் காளையர்கள்
பேரொலியும்
பம்பை பறை ஒலியும் ஆர்பரிக்கும்
கடல் ஒலியும்
ஏமாங்கத நாட்டினிலே
எண்திசையும் முழங்கிடுமே 9
சேறு மணங்கமழும்
செழுமை மிக்க வயலினிலே
வரிகொண்ட விறால்
மீன்கள் தறி கெட்டு
ஓட்டமிட
எருமையும் எருதையும்
ஏரினில் பூட்டி உழும்
உழவர்கள் எண்ணிக்கை
விண்மீனாய் இருந்தனவே 10
நிலமகளை மனம் தொழுது வெண்முளை
நெல் விதைப்பர்
நாற்றங்கால் நாற்றெடுத்து
நடவு செய்ய நாள் குறிப்பர்
நடவு நடும் நாரிகைகள் எண்ணிக்கையை
கணக்கெடுத்து
முன்
நாளே அழைத்திடுவார் முதல் நடவு செய்வதற்கு 11
செந்தனம் மேல் சேறு படும் நாற்றின் முடி பிரிக்கையிலே
அங்கிருந்த கயல்கள்
எல்லாம் அஞ்சி குதித்தோடிவிடும்
கவரிமான் கன்றருந்தி
மீந்த பாலை முலை சொரியும்
பால்
மணத்தால் மீன்களெல்லாம் பாய்தனவே
தாமரை மேல் 12
நாற்று நடும் உழத்தியரின் பாட்டொலியின்
ஆரவாரம்
கார்கால முகிலெழுப்பும் கடும் முழக்கம் என்றெண்ணி
மயில் கூட்டம்
அகவுவதை குயில் கூட்டம்
மனம் அஞ்சி
காதலனின் பிரிவு
கொண்ட காதலி போல் ஒதுங்கியது 13
கழனி வாழ் உழவருக்கு கைவளையாள்
மது ஊட்ட – அவன்
சிந்திய மது உண்டு மயக்கத்தில்
இள அன்னம்
கன்னி நாரையுடன்
கலவியதை கண்ட பேடை மயில்
ஆண்மயிலுக்கு அதை காட்டி அறிவுதனை
புகட்டியதே 14
காதலியர் கண்களென
குவளபூவை களையாது விட
கன்னியவள் முகமென்று
தாமரையை தவிர்த்து விட
களையெடுக்க வந்தவர்கள்
தன் காதலியின் உடலழகை
ஏழு
சுரங்களுடன் இசைக்கும் நிலை உழவர் நிலை 15
சூலுற்ற பச்சைப்பாம்பின் தோற்றம்
போல் நெற்பயிர்கள்
கீழோர் கை செல்வம் போல் தலை நிமிர்ந்த
நெற்கதிர்கள்
தெளிந்த நூல் கற்றோராய் சிரம் வணங்கும் முதிர்ந்த
கதிர்கள்
ஏமாங்கத நாடு கொண்ட எழில் வளமே பெரியதாகும் 16
மீன் கண்ணின்
இடம் அளவு வெற்றிடமாய்
இல்லாமல்
தேன்
இறாலின் திரட்சியுடன் கன்னல்
வளர் காடுகளும்
களிர் மறையும்
வளப்பமுடன் நெல் வளர்ந்த
நெடுநிலமும்
வானவரும் போற்றுகின்ற
வளம் கொழிக்கும் நாடிதுவே 17
கதிர் அறுத்த
கழனிகளில் வாளைமீன்கள் கலைந்தோட
நெற்கட்டின் சுமை அதிர கமுகு மரம் பழம் உதிர
நெற்போரின் நெடு உயரம்
வான் முகிலை தடை செய்ய
சுமை
தாங்க முடியாமல் நில மகளும் நிலைகுலைந்தாள் 18
எருமைகளும் எருதுகளும்
போரடித்து நெல் பிரிக்க
பிரித்த நெல்லை
காற்றினிலே தூற்றி அதன் தரம் பிரிக்க
செந்நெல் குவியலெல்லாம்
பொன்மலை போல் உயர்ந்திருக்க
சோறுடை பெரு நாடென்ற பெயர் கொண்ட ஏமாங்கதம் 19
குவளை விழி கோதையர்கள் குளிர்
குளத்தில் நீராட
பாலாடை மேகலையோ
வடம் இற்று மணி சிதற
சிதைந்த மணி அத்தனையும் சேர்த்தெடுக்க
ஆளின்றி
வாவிகள் கொண்ட நீரினிலே விண் மீனாய் மிதந்தனவே 20
மடுக்கலில் மலர் மேய்ந்த கருங்குன்று
எருமை எல்லாம்
மடி
சுரந்த பாலெல்லாம் தாரையாய்
நிலம் நனைய
தன் மகவு பாலருந்த தானிருக்கும்
மனை ஏக
மங்கையர்கள் தந்த கலன் மடிப்பாலால்
நிரம்பியது 21
அவள் கண்ணில்
அவன் உருவம் எப்போதும்
குடியிருக்க
அவள்
மீது காமத்தை ஒழியென்று
அவள் ஊட
எழில் மிகுந்த
மேகலையை அவன் எட்டி பிடித்திழுக்க
அறுந்த மணி அத்தனையும் சிதறியது
பொறி தணலாய் 22
கொடியிடை
மங்கையர்கள் கொவ்வை வாய் மது உமிழ
இளம்
புன்னைகள் பூத்தன இசை வண்டுகள் ஆர்த்தன
மாடங்கள் ஒவ்வொன்றிலும்
வின்மீன்கள் மலர்ந்தன
வாழை முகைகளோ பெண் மென் தனம் போல் மலர்ந்தன 23
உணவுக்கு கூடங்கள்
ஆயிரம் அறத்திற்கு இறைநிலம்
ஆயிரம்
கொடி
இடை மங்கையர்கள் கோலம் போடுமிடம் ஆயிரம்
செய்தொழில்
தினம் ஓம்பி செமையோர்கள்
ஆயிரம்
மங்கலங்கள் ஆயிரம் என மலர்ந்திடும் நிகழ்வுகள்
ஆயிரம் 24
நற்தவம் செய்வோர்கள்
நாடிடும் நாடு இது
இல்லற தருமத்தில்
நெறிகாப்போர் நாடு இது
நிலை செல்வம்
கல்வியை கற்றுத் தரும் நாடு இது
நிலையா பொருள்
ஈட்ட விரும்புவோர் நாடு இது 25
நகர் வளம் :
ஏமாங்கத நாட்டில்
உள்ள எழில் நகரம் ராசமாபுரத்தில்
விண்
தொடும் மரங்களும் வீங்கெழில்
சோலைகளும்
குயில் இசை மயக்கத்தில் குதித்தாடும்
மயில்களும்
கண்
இமை அசைவின்றி காணலாம்
அவ்வழகினை 26
துடியிடை கன்னியர்
குளித்திடும் பொய்கையில்
சந்தனக் குழம்புடன்
நறுமலர்கள் மிதந்திட
மெய் அணி சுண்ணமும் பூசிடும்
புனுகுவும்
கார்குழல் புகையுடன்
கலந்தங்கு இருந்தன 27
சுவை மிகு கரும்பையும் சோற்றின்
கவளத்தையும்
விரும்பியே உண்டிடும்
மலை நிகர் வேழங்கள்
கல் மதில் உட்புறம் மரக்கதவுகள்
பின்புறம்
கருமேகக் கூட்டமாய்
சூழ்ந்த நல் நகரமாம் 28
தேரினால் பொன் சிதறும் தேரோட்ட
பயிலிடமும்
பொன்மாலை அணிந்திட்ட
பரி ஏற்ற பயிற்சியும்
கேடயம் துணை கொண்டு வாள் வீச கற்றலும்
தனித்தனி கூடம் தான் தனிச் சிறப்பு அந்நகரில் 29
இடை நகர் தோற்றம் :
பல தொழில்
செய்திடும் புறநகர் கடந்திட்டால்
இடைநகர் அடையலாம்
மருத நிலந்தனில்
இடி என முழங்கிடும் அலைகடல்
ஓசை போல்
மக்களின் பேச்சொலி
மருதத்தில் முழங்கிடும் 30
செந்நிறப் பொடியுடன்
பொன் துகள் சேர்த்து
சந்தனக் குழம்புடன்
பன்னீர் தனை கலக்கி
தையலார் மென்கரம்
தாங்கிய துருத்தியால்
வீதியில் சிதறின
இந்திர தனுசு என 31
கார்மேக காதலால்
மேல் நோக்கும் மயில்களாய்
பொன்
மாட உச்சியில் தொங்கிடும்
மணிக்குடங்கள்
மாடத்தில் உலா வரும் முகில்
கொண்ட உரசலால்
மழை
கொட்டும் அருவியாய் மாடமும்
அழுதத ங்கு 32
உலர்ந்திடும் நெல்லை
காத்திடும் அணங்குகள்
கவர்ந்திடும் கோழிமேல்
பொன் காதணி எறிந்தனர்
சிறு தேர் யானை மேல் ஊர்ந்திடும் மழலைகளை
காதணி தடுத்திடும்
செல்வத்தின் நகர் இது 33
பூவையும் பொன்னையும்
அணிந்திடும் பூவையர்
புருவத்தின் வில் கொண்டு விழியம்பு
எய்துவர்
வேல் கொண்டு
போராடும் வீரத்திருமகன்கள்
கன்னியர் கை அணைக்கும் வின்னவர் நகரம் இது 34
எள் விழ இடம் இல்லை ஈரொன்பது மொழியுண்டு
திரண்டிடும் மக்கள்
வந்து நகரினில் நிறைவதுண்டு
பறவைகள் வாழ்ந்திடும்
பழமரத் தோப்புகளுண்டு
மண்ணில் விண்ணுலகமாகும் மருதநிலம்
அந்நகரம் 35
அகழியின் தோற்றம் :
ஒளிமுத்து மாலைகள்
சூடி ஒடிந்திடும் இடையுடனும்
கமல
மொட்டு தனத்துடனும் கயல் ஒத்த விழியுடனும்
தத்தை கைகொண்ட
மகளீர் தத்தைக்கு அன்னம்
எண்ணி காட்டும்
தாமரை மலர்கள்
கொண்ட அகழியின் அழகைக்
காண்போம் 36
( தத்தை : கிளி )
கொன்றிடும் தன்மை உடைய
சுறாமீன்கள் முதலைக்கூட்டம்
உண்டிட ஆட்கள்
இன்றி உலாவரும் அகழி தன்னில்
பகைவரின் உலாவைக்
கண்டு பதறிடும் இறாமீன்கள்
கலக்கிடும் அகழி
நீரை பறந்திடும் அன்னங்கள்
எல்லாம் 37
வண்டுகள் முழங்கும்
ஒலியால் இணையுடன் இருக்கும்
அன்னம்
தாமரை மலரின்
மீது தனிமையில் போய் தங்கியது
சுற்றத்தை விட்டு
நீங்கி பிறவி துன்பத்தை
நீக்குதற்கு
மாதவம் செய்யும்
முனிவரின் மாண்பினை ஒத்திருக்கும் 38
பொன் வெள்ளி
மண்குடங்கள் நீரினில் அமிழா வண்ணம்
மென்மலர் கொண்ட நீர்துறை மங்கையர்கள்
குளியலாலே
கொங்கைகள் கொண்ட குங்குமம் கரைந்திடும்
தன்மையாலே
நீரெல்லாம் சிவந்து
காணூம் நிறைந்திடும் மணத்தினாலே 39
மதிலின் தோற்றம் :
பகைவர்கள்
அகழி தாண்டி பற்றினால்
மதிலின் சுவரை
சதக்கினி பொறியை
கொண்டு சாய்க்கலாம் நூறு பேரை
தூக்கியே எறியும்
பொறியும் பேய் யானை பாம்பு பொறியும்
கூற்றுவன் பொறியும்
கொண்ட விண் தொட்ட மதில்களாகும் 40
கட்டிப் பிடித்து
முறுக்கும் சங்கிலி பொறிகள்
உண்டு
கொலை செய்யும் தன்மையுள்ள
வனவிலங்கு பொறிகள் உண்டு
அம்பினை மழையாய்
பொழியும் விற்பொறிகள் மிக்க உண்டு
வரையின்றி தொடர்ந்து
தாக்கும் வாள்பொறிகள் வசதியுண்டு 41
கொல்திறன் அதிகம்
கொண்ட குதிரைப் பொறிகள்
உண்டு
கற்களைக் காராய்
உமிழும் கவண் போன்ற பொறிகளுண்டு
நெருப்பினை நீர் போல் கொட்டும்
தீப்பொறிகள் அதிகம் உண்டு
மனிதனின் தலையைத்
திருகும் மரப்பொறிகள் மதிலில்
உண்டு 42
அழகிய ஆந்தைப்
பொறிகள் அன்னம் வடிவுடைய
பொறிகள்
உருக்கிய செம்பைக்
கொட்ட எறிந்திடும் வெம்மைப்
பொறிகள்
கொதித்திடும் நெய்யைச்
சொரியும் கொப்பறை போன்ற பொறிகள்
யவ்வனர் அறிவின்
திறனால் அமைந்தன மதிலின்
மேலே 43
வைரமணி பதித்த
கதவுகள் வஞ்சியரின் முகம் போலாகும்
வைரம் பதித்த இரு
கூடங்கள் வனிதையரின் தனம் போலாகும்
வானளாவி பறக்கும்
கொடிகள் கோதையரின் கூந்தலாகும்
வைரஒளி அகழி நீரே மதில் பெண்ணின் ஆடையாகும் 44
அகநகர் தோற்றம் :
பூமியிலே பொன் எடுத்து பொன்னை
சாரளாய் தெளித்து
பொருளற்ற வறியவர்கள்
பொருள் பெற்ற பாக்கியத்தால்
மறுமையில் விண்ணுலகம்
செல்லும் குடியுடைய உள்நகரம்
தேவலோகம் ஒத்த அதன் சிறப்பினை
சிறிது காண்போம் 45
பரத்தையர் சேரியின் தோற்றம்
:
கொவ்வை வாய் செவ்விதழும்
செம்பவள தொண்டையுடனும்
தோழியர் வந்து கூறும் காமத்தின்
தூதினாலே
ஆயிரத்தெட்டு கழஞ்சி
பொன்னுக்கு அழகிய தன் மேனி தந்து
காமத்தை நுகர்ந்து
மகிழும் கிழத்தியர் இடத்தை
சொல்வோம் 46
குங்குமக் குழம்பினாலே
குளிர் வாசல் திண்ணை மெழுகி
சந்தன மணம் கமழும்
சயனறை மாலைகள் தொங்க
சுவர்களில் காமம் பொங்கும் சுந்தர
ஓவியங்கள் வரைந்து
மென்மலர் படுக்கை கொண்ட விண்ணவரும் விரும்பும் சேரி 47
செம்மணி மாலைகள்
சுமையில் சிற்றிடை துவண்டு
சரிய
அழகிய தனங்கள்
மீது அப்பிய சந்தனமும்
பொடியும்
தூய்த்ததால் உதிர்ந்ததன்
மேல் மொய்த்திடும் வண்டுகள்
வீழ்ந்து
கிடந்திடும் முற்றம்
மணக்கும் மன்னரும் மகிழ்ந்து
தங்குவர் 48
சிலம்புடன் மேகலையும்
சேர்ந்து இசைத்திடும் குழலின் ஓசையும்
மென்விரல்கள் மீட்டி
எழுப்பும் மகரயாழ் இன்னிசையும்
செம்பவள வாய் உதிர்க்கும் பாட்டுகள்
மெட்டின் ஒலியும்
பரத்தையர் வாழும்
இடம் வானுலகம் போன்றதாகும் 49
வண்டுகள் மொய்க்கும்
மலரை மாலையாய் சூடிய மங்கைகள்
அகில் புகை மூட்டத்தாலே ஆதவன் அங்கு மறைய
பகல் அது இரவாய்
போக பாவையர் அணிகலன்களால்
இரவது பகலாய்
மாறும் காமனின் சேரிகளெல்லாம் 50
சந்தன குழம்பு
கொண்டு தரையினை மணக்க மெழுகி
அகிற்புகை வெண்கடுகு
தூவி வணிகர்கள் கடை திறந்து
யவ்வன பெட்டிகள்
கொண்ட முத்துமணி வைரம் குவித்து
பகலினை இரவாய்
ஆக்கும் கருநீல மணிகள்
வைத்தார் 51
அணிகலன் வைக்கும்
போது சிதறிடும் பொருட்கள்
தன்னை
கையது மீண்டும்
கொள்ளா குபேரனை ஒத்த வணிகர்கள்
பழக்குலை கமுகு கொண்டும் பசும்பொன்
மணிகள் கொண்டும்
கடையினை அழகு செய்யும் சிறப்பினை
செப்பல் அரிது 52
நெரிசலால் மக்கள்
கூட்டம் நடந்திட இடம் இல்லாமல்
ஒர்மார்பு கொண்ட சந்தனம் எழுவர்
மார்பு பூசுமாறு
தேன் கூட்டு
வண்டுகள் போல் நெருக்கிடும்
வணிகர் வீதியில்
எழுந்திடும் ஓசை தன்னை எழுத்தினில்
வரையா வளமை 53
தெருக்களின் தோற்றம் :
முரசொடு சங்கு ஒலிக்கும் மங்கையர்
பூண்ட அணிகள் ஒளிரும்
மூட்டிட்ட அகிற்புகை
எழும்பி முகிலென ஞாயிறை
மறைக்கும்
குடையோடு குடை உரசும் களிறோடு
களிர் நெருக்கும்
தெருக்களின் அழகைக்
காண தேவையோ ஆயிரம்
கண்கள் 54
அலைகடல் ஓலியைப்
போல் ஆர்த்திடும் தேவர்கள்
பூஜை
பூஜையை சேவிக்க
வந்த மன்னர்கள் முடியும்
முடியும்
மோதியே எழுப்பும்
ஒலி முகில் மோதும்
மின்னலைப் போல்
காண்பவர் கண்கள்
கூசும் ராசமாபுர வீதிகள் தோறும் 55
சிறு ஊடல் கன்னியரை செல்லமாய்
கணவன் இழுக்க
சிற்றிடை மேகலை வடம் இற்றிட
தரையில் சிதற
பொன் நிற மணிகள் எல்லாம்
பூமியில் சிந்தி கிடப்பது
வானவில் கீழே வந்து வந்து தரை தவழ்ந்த அழகை தரும் 56
வெள்ளிய அரிசின்
உணவும் மணந்திடும் நெய்யின்
கறியும்
கட்டித்தயிர் துவையலுடன்
உண்டிடும் மாந்தர் ஒருபுறம்
மலையருவி கொட்டும்
நீர்போல் மதநீர் சொரியும்
யானைகளும்
சிட்டென பறக்கும்
பரிகளும் சிறுவர்களின் ஓசைகள்
ஒருபுறம் 57
இன்னிசை சிந்தும்
சங்கொலியும் எண்திசை கேட்கும்
முழவொலியும்
மான்விழி மகளீர் மேனி
பூண்ட அணிகலகள் மென் ஒலியும்
நரம்புடன் காற்றில்
இசைக்கும் மகரயாழ் தேன் குழல் ஒலியும்
நடந்திடும் நதிகள்
எழுப்பும் சல சல ஒலிகள் ஒருபுறம் 58
துடியிடை மங்கையர்
ஆடும் பந்துகள் ஒலியைக்
கேட்டு
பஞ்சி ஒத்த இறகுகள் கொண்ட அன்னங்கள் அஞ்சி ஓடி
முத்துமணி பதித்த
மாடத்தின் உச்சியில் அமர்ந்த
நிலை
முழுமதி நீ துணையே என்று நம்பியது போல்தோன்றும் 59
மனைவியர் மார்பின்
சந்தனம் உலர்ந்திட மூட்டிய
அகிற்புகை
முகிலென திரண்டு
எழுந்து வானினை சூழ்ந்து
நிற்க
காதணி அணிந்த
ஒளியில் காதலிகள் செவ்விய
முகம்
மேகத்தின் இடையே காணும் முழுமதி
போல் தோன்றும் 60
வெண்நிற மாடம் நிற்கும் செந்நிற
அழகிய மகளீர்
வெற்றிலை பாக்கு
மடித்து வனஅரசன் போல் இருக்கும்
கணவனின் வாய் கொடுத்து
கை
மாலை செம்பகம் வாங்கி
முத்துக்கள் அணிந்த தங்கள் முகில்
குழலில் சூடிக்கொள்வர் 61
மைகொண்டு வாளாய்
நீண்ட மயக்கும் விழி கொண்ட மகளீர்
மார்பு கொண்ட சந்தன குழம்பு
மணவாளன் மார்பில் பதிய
கொங்கையால் உழுது தூய்க்கும் கொள்ளையற்ற
இன்பம் தன்னை
விரும்பியே இணைந்து
பெறுவர் ஐங்கணையான் வரத்தினலே 62
அனிச்சைப்பூ மென்மையுடைய
ஆரணங்கின் அழகிய சிலம்பு
கணவனின் சிரத்தைத்
தொடும் கவிழ்ந்த பூ மஞ்சம் படும்
காமத்தை நுகரும்
மக்கள் இரவு பகல் அறியாததால்-
அந்நகர்
இரவு
பகல் இன்றி இருக்கும்
வானுலகை ஒத்து இருக்கும் 63
செவ்விதழ் மங்கையர்
தரும் செல்வமாம் இன்பம்
உண்டு
செழித்த அந்த மாநகரில்
செல்வமாம் பொருளும் உண்டு
வீரக் கழல் கொண்ட
வீரர்களின் செல்வமாம் வீரம் உண்டு
– என
தேவர்கள் இமைக்கா
நோக்கும் செவ்விய நகர் ராசமாபுரம் 64
திங்கள் முக்குடை
உடைய அருகனின் ஜினாலயங்கள்
திகழ்ந்திடும் இராசமாபுரம்
வீதிகள் ஒவ்வொன்றிலும்
வேள்வியும் விழாவும்
அங்கு விடாமல் தொடர்ந்து வர
வெண்சங்கொடு மத்தளஓசை முழங்கிடும் எந்நாளும்
அங்கு 65
அரண்மனைச் சிறப்பு :
நாற்திசை அகழி சூழ்ந்து நடுவினில்
அரண்மணை அமைத்து
அகழியின் ஆழம் கருதி அலைகடல்
சுறாக்கள் பேணி
வான் எல்லைக்
காணச் செல்லும் மதிலினை
முகில்கள் தடுத்து
வானுலகம் கண்டு அஞ்சும் வளராதே
என இறஞ்சியது 66
மேகத்தின் கெஞ்சல்
கேட்டு மேக மண்டலத்தில்
நின்று
தன்னிடம் பறக்கும்
கொடிகள் விண்ணினை அழைத்தற்கொப்ப
நால்வாயில் கோபுரக்
கதவுகள் நல்மணிகள் பதிந்து
தொங்க
கோபுரத்தின் உச்சி மாலைகள்
திருமாலின் மாலைக்கொப்பும் 67
சந்தனம் பூசிய மேனியில் சங்கீன்ற
முத்துமாலை மகளீர்
தேன்மலர் சூடிய கூந்தலும் செங்கனி
பிளந்த இதழ்களும்
துள்ளிடும் இளமையோடு
தூண்டிடும் காமன் கணையால்
காமத்தில் ஆடும் சோலை இந்திரனின்
கற்பகச்சோலை 68
ஆண் யானை தன்னையாளும் பெண் யானையை நோக்கி
நிற்கும்
பெண்மானின் அழகைக்
கண்டு ஆண் மானின்
விழிகள் ஏங்கும்
பொன்னோடு வெள்ளி
கொண்டும் பொருந்திய சிலைகள்
அங்கு
மன்னனின் காமத்தீயை
வளர்த்திடும் வசந்தமண்டபம் உண்டு 69
இனிய குயில்
பாட்டிசைக்க எழில் தும்பி தன்
யாழ் மீட்ட
மலர்
வண்டு மத்தளத்தில் மயில் அங்கு நடனம் இட
பூ மரங்கள்
பூச்சொரிய சூழ்ந்திருக்கும் தோப்புகளை
நீக்கினால் உயிரது
நீங்கும் நினைத்தால் உயிர் தொடரும் 70
பந்தடும் இடங்கள்
எல்லாம் பனிமுத்துக்கள் பதிந்திருக்கும்
பொன் ஒளியில் சித்திரங்கள்
புதிது புதிதாய் அழகு செய்யும்
நவமணிகள் கொண்டு
அங்கு நட்ட தூண் வரிசையாலே
வானுலகம் பெயர்ந்து இங்கு வந்தது போல்
காட்சி தரும் 71
மும்மத நீர் சொரிந்து முகபடாம்
கொண்ட கரிகள்
காற்றினும் வேகம் கொண்ட
குதித்தோடும் பரிகள் கூட்டம்
ஓடிடும் தேர்கள்
கூடி ஒலித்திடும் பெரும்
இரைச்சல்
ஆழியின் ஆரவாரமாய்
அமைந்திடும் அந்த இடம் 72
வேந்தனைக் காத்து
நிற்கும் வீரர்கள் துயிலும்
கூடமும்
திறை
இறை கப்பம் வைக்கும்
செம்பொன் கருவூல அறையும்
மணமலர் அணிந்த
கூந்தலார் அணிகலன் வைக்கும்
மாடமும்
போர்கள ஆயுதங்கள் கொண்டு பொதிந்திட்ட
அரண்மனையது 73
கடைக்கண் பார்வையாலே
காளையர் மெய்யின் வெப்பம்
நெஞ்சினை சுட்டுத்
தாக்கும் பாவையர் கூத்தின்
அரங்கம்
போரினில் தோற்று
நின்ற பகைமன்னர் தேவியர்கள்
வழிபட்டு வாழ்நாள்
கழிக்கும் ஜினாலயாமும் அங்கு உண்டு 74
குறவையர் கூத்தின்
ஒலியும் காண்பவர் கைகள் ஒலியும்
பாட்டுகள் இசையின்
ஒலியும் பக்க இசை கருவிகள் ஒலியும்
மகரயாழ் மீட்டும்
ஒலியும் மங்கையர்கள் சிரிப்பின்
ஒலியும்
நெஞ்சமே மகிழ்ந்து
நிற்கும் நித்தமும் இனிதே கழியும் 75
சச்சந்தன் வரலாறு :
கச்சையணிந்த கன்னியர்கள்
கனவில் உலவும் சச்சந்தன்
பெரும் நஞ்சு கொண்ட பாம்பாய்
பகைவர் மேல் சினமுடையான்
பணிந்து தஞ்சம்
கேட்டோர்க்கு பாற்கடல் அமுதம்
ஆனவன்
ஏமாங்கத்தின் எழில் மன்னன் ஏந்திழை
விசயின் மணவாளன் 76
திருமகள் விரும்பி
நோக்கும் திண்ணிய தோள் உடையான்
இயல்
இசை நாடகத்தில் ஈடில்லா
திறன் உடையான்
வறியோற்கு அள்ளிதரும்
வளம் பெற்ற கரம் உடையான்
பகைவரின் தேர் படையை
பந்தாடும் வலிமை உடையான் 77
கடல் சூழ்ந்த
உலகாளும் வெண்கொற்ற குடையாலும்
உலகத்து மக்கள்
மேல் உள்ளம் கொண்ட பரிவாலும்
அவன் ஆளும் நிறையாட்சி அரும் மாட்சி பெற்றதாலும்
காவலன் மேல் காதலினால்
களிக்கிறது ஏமாங்கதம் 78
செல்வம் கொழிக்கும்
நாட்டின் பெரும் செறுக்குடையான் சச்சந்தன்
வந்தவர்க்கு அள்ளித்
தந்து வருணனுக்கு வாரிசானான்
எதிரிகளின் உயிர் எடுக்கும் எருமையுடை
எமனுமானான்
அருள் மனதில்
அன்பனாகி அணங்குகளின் காமன் ஆனான் 79
விசயையின் தோற்றம் :
நீர்வளம் கொழித்து
நிற்கும் விதேகத்தின் மன்னனுக்கு
தாமரை வாழ் திருமகளாம் தன் மகளே விசயையென்பாள்
இளம்பிறை புருவமுடன்
எறிந்திடும் வேல் விழிகளுடன்
திருத்தமாய் செதுக்கி
வைத்த செவ்விய பூஞ்சிலையாவாள் 80
இளமூங்கில் தோளுடனும்
இருண்ட சுருள் குழலும்
குளிர் திங்கள்
இளம்பிறைபோல் குறைகாணா நூதலுடன்
சித்திரை
முழு மதிமுகமும் தேன் தளும்பும் செவ்விதழும்
எள்ளுப்பூ நாசியுடன்
எழில் கொண்ட ஏந்திழையாள் 81
மான் மருள் விழிகளிலே செவ்வரிகள்
படர்ந்திருக்கும்
மாயோனின் பாற்கடல்
போல் மங்கையவள் முகம் ஒளிரும்
மகரமீன் வடிவினிலே
செவிகள் குண்டலங்கள் கொண்டிருக்கும்
வானகத்து தேவதை போல் வண்ணமயிலாய் இருப்பாள் 82
குலை தள்ளா இளங்கமுகின் மரகத மணிக் கணுவாய்
நீருண்டால் வெளிதெரியும்
நீர்சங்கு நிற கழுத்தும்
காற்றினிலே அசைந்தாடும்
மூங்கில் ஒத்த மென் தோள்களும்
செங்காந்தள் விரல்களுடன்
கரம் கொண்ட கன்னியவள் 83
செங்கமல மொட்டுகள்
போல் செதுக்கி வைத்த கொங்கைகளும்
வடகங்கை சுழல்கள்
நாணும் வலம்புரி கொப்பூழ்
சுழியும்
இலைபோல் படர்ந்திருக்கும் இளஞ்சிவப்பு
வயிற்று அழகும்
வானுலக மங்கை ஒருத்தி மண்ணுலகம்
வந்தாள் என்பார் 84
( கொப்பூழ்
: தொப்புள் )
கண் அறியா அசைவுடைய கை அணையும் சிற்றிடையை
கண்டவர்கள் இல்லை என்பார் காணாதவர்
உண்டு என்பார்
நாகப்பாம்பின் படம் ஒத்த நன்மணியால்
செய்த மேகலை
இடை
சுற்றி வீற்றிருக்கும் இளம்பரிதி
செந்நிறமாய் 85
வெண்யானை துதிக்கையும்
வெட்கமுறும் அவள் தொடையால்
இளம்
வாழைத் தண்டாக இரு கால்களும் திரண்டிருக்கும்
மகரம் போல் வடிவில் செய்த குரங்கு செறி என்னும்
அணி
செம்பஞ்சித் துடையினிலே
சேர்ந்து தனி அழகு தரும் 86
நீட்டலும் குறுக்கலும்
இல்லா நிறைந்த கரும்சுருள் குஞ்சும்
அம்பினை போட்டு
வைக்கும் அம்பறா தூணி போன்றும்
ஆடுதசை இடம் பெயரா அமைப்புடைய
கணுங்கால்கள்
அமைவதில்லை மற்றவர்க்கு
அமைந்தது தான் நம் விசைக்கு 87
முத்துப் பரல் இட்டு செய்த கிண்கிணியும் பாடகமும்
அணிந்த இடம் வலியில்
வருந்த அதை கண்டு சிலம்பு நகைக்க
இளஆமை முதுகினைப்
போல் இரு பாதங்கள்
அழகு தனை
போற்றிப் புகழ்வார்க்கு புலன் உணர்வு
கலங்கி விடும் 88
திருமகளின் பேரழகுடனே
செவ்விய மெல் விரல்களில்
நுனியது தடிப்பு
இன்றி செம்பஞ்சி நகங்கள்
உண்டு
இலவம் பூ இதழைப் போல மென் பஞ்சு சிற்றடிகள்
ஏழடி
நடந்து சென்று ஒரு காதம் போல் வருந்தும் 89
இத்தகைய எழிலை கொண்ட ஏந்திழையால்
விசயை
சச்சந்தன் தன் மனதில் சித்திரமாய்
எழுதி வைத்து
காதல் என்னும்
நீர் பாய்ச்சி காமம் என்னும் மலர் தூவி
அவன்
நினைவின் இன்பந்தனை இயம்புதற்கு
மொழியுமில்லை 90
தான் சிந்தும்
மதநீரை தானே உண்ணும்
மதகளிறை
தன்
நாட்டில் கொண்டிருக்கும் விதேகத்தின்
முடிமன்னன்
வீட்டுச்
செல்வம் விசயை மனம் வேங்கை
நிகர் சச்சந்தன் மேல்
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாய் மோகம் கொண்டாள் 91
ஏமாங்கத நாட்டு
மன்னன் ஏறு போன்ற சச்சயந்தன்
விதேகத்து மன்னனிடம் பெண் கேட்டு செய்தி
சொல்ல
மகள் கொண்ட காதலாலும் மந்திரிகள்
கருத்தினாலும்
விசயை என்னும்
பேரழகியை விவாகம் செய்து
வைத்தான் 92
செவ்விதழ் சிந்தும்
தேனை வண்டென உண்ணும்
மன்னன்
கவளத்தை உண்ணும்
களிறாய் காட்சிக்கு பொருந்தலானான்
அன்பொடு இன்ப முயக்கத்தில் அன்னங்கள்
அரவங்கள் போல
புணர்ச்சியில் புரண்ட
அவர்கள் போகபூமியர் செல்வம்
ஒப்பர் 93
மணமலர் தொடுத்த
மாலை மெய்யிலே பூசிய சுண்ணம்
அறுசுவை ஊண்டியோடு
அகில் புனுகு சந்தனமும்
ஐம்பொறி நுகர்ந்து
மயங்க அடைந்திடும் இன்பத்தோடு
ஈருடல் ஓருயிர்
ஆகி இருவரும் மயங்கினர்
அங்கு 94
தடையின்றி தூய்க்கும்
இன்பம் சாந்தணிந்த குழலை கலைக்க
மாவடு கண்கள் இரண்டும் மயங்கியே
ஊடல் கூடலெழுப்ப
ஊடிய காலத்தில்
அவளடி சிரசினில் சிலம்பொலி
எழுப்ப
கூடிய காலத்தில் மேகலை குறுவோசை
கொண்டு முடியும் 95
அணிகளால் ஒளியை வீசும் அழகிய இளம் தனங்கள்
ஒரு
கோட்டில் எழுதியதாய் நெளிந்திடும்
மெல் சிற்றிடையும்
காதணி குண்டலம்
பொருந்திய கனிமுகம் கொண்ட விசயையுடன்
மாரிகால மேகம் பெய்வது போல பொழிந்திட்டான் இன்பம் தனை 96
பவழவாய் அமுதம்
உண்டு கொடியிடை கொங்கையில்
தங்கி
இடிபடும் மாவைப்
போல உணர்வுடன் உடலும்
துவள
ஐம்பொறிக்கும் இன்பம்
ஊட்டி அனுபவித்த சுகத்தினாலே
மண்ணுலக கடமைகளை
மறந்திட்டான் சச்சந்தன் 97
வேழம் நிகர் சச்சாயந்தனுக்கு கட்டியங்காரன்
ஒரு அமைச்சன்
கண்ணும் இமையும்
போல மன்னனும் மந்திரியும்
தோழராவர்
மன்னருக்குரிய சிறப்பினை
தந்து மக்களுக்கு முறசறிவிக்க
கட்டியங்காரனை அழைத்து
செப்பினான் தன் முடிவை 98
பரி படை மிகவும் கொண்ட அரிஞ்சயன் மார்பில்
உதித்து
முற்பிறவி என் வரத்தால் பிறந்தவள்
தான் என் விசயை
அவள் மேல்
உள்ள அன்பினாலும் அவளை நீங்கா
நெஞ்சினாலும்
அரசனாக நீ பொறுப்பு ஏற்று ஆட்சி செய் ஏமாங்கதத்தை 99
கட்டியங்காரன்
உள் மனதில் கவிழ்ந்திருந்த எண்ணம்
தனை
காவலன் சச்சயந்தன்
சொல்ல களிப்புற்ற உள்ளத்தோடு
பட்டத்து யானையின்
மேல் படர்ந்திடும் பட்டு மெத்தையை
நாயின் மேல் இட்டதாகும் நான் அரசை ஏற்றால்
என்றான் 100
கட்டியங்காரன்
மறுத்து சொல்ல சச்சயந்தன்
தன் நிலையை கூற
அவன்
காலடி தொழுது நின்று
கனிவுடன் உரைக்கலானான்
காதலியின் கட்டணைப்பில்
கட்டுண்டு பேரின்பம் காணீர்
கவலையற்று நீங்கள் இருக்க காத்திடுவேன்
இவ்வுலகை என்றான் 101
நிமித்திகன் எனும் பெயருடைய நேர்மைநெறி கொண்ட ஓர்
அமைச்சன்
மன்னனை வணங்கி
நின்று மறுத்திட்டான் மன்னன்
செயலை
சச்சயந்தன் ஊழ்வினையே
சனியாகி நாவில் அமர
பொறாமையில் புலம்புகிறாய்
போய் விடு இங்கிருந்து
என்றான் 102
சத்தியம் தர்மம்
நேர்மை தன் அகத்தே
கொண்ட நிமித்திகன்
அமைச்சனாக என் கடமையோ அரசனுக்கு
நலம் உரைத்தல்
சச்சயந்த மாமன்னனே
சற்று நீர் செவிமடுப்பீர்
பெண்
இன்ப மயக்கத்தில் பழியடைந்தோர்
பலருண்டு 103
பெருந்தவத்தான் பிரம்மதேவன்
திலோத்தமையை மோகித்து
அவள்
சென்ற திக்கு காண நான்முகனாய் வடிவெடுத்தும்
திலோத்தமையை அடையலின்றி
தெய்வலோக வாழ்விழந்து
தவம்
செய்து பாவம் தீர்த்தும்
பழிநிலைத்து போனதன்றோ 104
பாண்டவர் ஐவர் சேர்ந்து பத்தினி
ஒருவர் ஆகி
பெற்றிட்ட பழியை போக்க பிறவியில்
யாரும் இல்லை
காமத்தால் பிறந்த
பழியை கருமத்தால் அழித்தல்
இல்லை
இம்மையில் மட்டும்
இன்றி மறுமையிலும் நரகம் தொடரும் 105
ஆயிரம் கண் இந்திரனும் அறிவுடை
அமைச்சன் சொல் கேட்பான்
இந்திரனை ஒத்த நீயும் நிமித்தனின்
மொழியை ஏற்பாய்
மானனைய மனைவி விசயைக்கு மாபெரும்
துன்பம் செய்யும்
ஓரறிவு உடையவனானாய்
உருத்ரதத்தன் நான் செப்புகின்றேன் 106
அமைச்சர்கள் வாய்மொழி
கேட்ட அரிமாநிகர் சச்சந்த மன்னன்
அவரவர் தவத்திற்கேற்ப
அமைவதே இன்பம் எல்லாம்
வாழ்நாளில் வாழும்
வாழ்க்கை வரையறை கொண்டுள்ளதால்
நிலையாமை பற்றி எனக்கு நீ உரைக்க வேண்டாம்
என்றான் 107
தருமநீதி கட்டளையால்
இடித்து கூறல் அமைச்சன்
கடமை
இதை
உணர்ந்த காரணத்தால் நான் உனக்கு
எடுத்துரைத்தேன்
மங்கை விசயை இன்பந்தனை மனம் மகிழ்ந்து அவளை புணர்க
நின்
தவறை நான் காணாமல்
நிமித்தன் நான் துறவு எற்பேன் 108
எதிர் வரும் தீமை தன்னை எண்ணம் ஏற்கா சச்சயந்தன்
இரவு
பகல் காலமின்றி இன்பத்தில் திளைத்திருந்தான்
இன்பப் படையெடுப்பில்
இருவருமே மோதிக் கொள்ள
ஆனிப்பொன் முத்தென
ஜீவகன் அவள் கருவில் வந்துதித்தான் 109
கரு தரித்த
நாள் அன்றே விசயை கண்டிட்டாள் கனவு மூன்று
மீளாத கனவு துயரத்தால் மங்கை அவள் அஞ்சிட்டாள்
கை நிறை பூவும் சந்தனமும்
கருத்தில் பதிந்த கனவுடனும்
அறவாழி ஜினாலயத்தில்
அருகன் அடி பணிந்திட்டாள் 110
சமணத்தின் புனித மரம் அசோகம்
கிளை முறிந்து விழ
கிளை
ஒடிந்த மரத்தின் கீழ் சிறுகன்று அசோகம்
வளர
வளர்கின்ற கன்றின்
மேலே மணிமுடியும் எண் மாலைகளும்
மனதில் கண்ட கனவை
மன்னனுக்கு எடுத்து சொன்னாள் 111
சச்சந்தன் தன் தேவிக்கு கனவு பலன் கூறலானான்
பெருமரத்தைப் பற்றி அவன் பொருளொன்றும்
கூறாமல்
சிறு கன்று உன் மகன் தான் சிறப்பான
மன்னன் ஆவான்
எட்டுமாலை அவன் மணக்கும் எண்பெரும்
தேவி என்றான் 112
அசோகமரம் முறிந்த
பலன் ஆரணங்கு அவனை கேட்க
அரசனான எனக்கு
வரும் ஒரு தீங்கு
அது என்றான்
பொன் வளையால் விசயை
பொறுக்கவில்லை அவன் மொழியை
தன்
உயிர் பிரிந்ததை போல் தரை தொட்டாள்
மயக்கத்தில் 113
கனவின் பலன்கள்
எல்லாம் பலிப்பதில்லை நீ அறிவாய்
- என
தென்றல் எனத் தழுவி மன்னன் தேற்றினான்
தன் மனைவியை
இன்பமொழிகள் பல கூறி ஏந்திழையை
மடி இருத்தி
தன்
தேவி மகிழ்ந்திருக்க தாதிகட்கு
ஆணையிட்டான் 114
தங்கமகன் கருவில்
வளரலானான் தாய் அவள் தளரலானாள்
செவ்விய வாய் வெளுத்து சிறு இடையும் பருத்து
கண்களில் பசலை தெரிய கை வயிறு முன் பெருக
அவள்
கொண்ட பேரழகு அனுதினமும்
மங்கியது 115
அறிவு என்னும் ஓர் அமைச்சன் அறிவுரைத்தான்
வேந்தனுக்கு
அறநிறியை நீ மறந்தாய் மறநெறியில் மனம் வைத்தாய்
காமம் என்னும்
கள் குடித்து நல்வினையை
நீ இழந்தாய்
விண் எழும்பும் ஊர்தி ஒன்றை விரைவாய் நீ செய் என்றான் 116
சிற்பக்கலை தேர்ச்சி
பெற்ற சிறந்த ஒரு தச்சனிடம்
செம்மையுடன் வானில்
செல்ல விண்ணூர்தி செய்ய சொல்ல
பலவகைத் துகில்கள்
நூலும் பசை மெழுகு
அரக்கு சேர்த்து
வான்வழி பறந்து
செல்லும் மயில் பொறி ஒன்றமைத்தான் 117
சச்சந்தன் கற்றுத்
தந்தான் மயிபொறியை இயக்குதற்கு
வஞ்சியவள் தேர்ந்து
நின்றாள் வான்பொறியின் விசையறிந்து
விண் தவழும்
மேகம் தொடும் வலப்புறமாய்
கை விசை இயங்க
தரை
பணிந்து நின்றுவிடும் இடப்புறமாய்
இயக்கினாலே 118
முறைப்படி நாட்டைப்
பெற்ற முதல் அமைச்சன்
கட்டியங்காரன்
அறநூல் அறிந்த அறவோரை
அவன் பகையாக்கிக் கொண்டு
செய்நன்றி முற்றும் துறந்த தீயத் தன் குணத்தினாலே
மன்னனை மாய்ப்பதற்கு
மனதினிலே திட்டங்கொண்டான் 119
மன்னனுக்கு பகையான
மாபெரும் தெய்வம் வந்து
மன்னனைக் கொள்வாய்
என இரவு பகல் சொல்கிறது
என்ன நான் செய்வதென்று எனக்கு
வழி தெரியவில்லை
மாண்புமிகு மந்திரிகளே மறுமொழி
கூறுங்கள் என்றான் 120
இடி கேட்ட பெரும்
நாகம் என பயங் கொண்ட மந்திரிகள்
கட்டியங்காரனின் கீழ்மையை
கருத்தினில் கொண்டதனால்
நம்பிய அரசனை அழித்தால் நலம் குலம் செல்வம் சிதறும்
வேந்தன் காட்டிய
வழியில் குல செல்வம்
காக்கும் என்றார் 121
மண்ணுலக மக்கள்
மொழிவர் மன்னரும் தேவரும்
ஒன்றென
தேவரைக் காட்டிலும்
அரசன் தேர்ந்த குண மேலோர்
ஆவர்
அரசனின்
அருளைப் பெற்றால் அடையலாம்
நன்மைகள் பல
மன்னனின் கோபம் என்றும் மண்ணுலகை விட்டு நீக்கும் 122
தெய்வத்தை வாழ்த்தி
நின்றால் தேவையில் நன்மை செய்யா
தெய்வத்தைத் தூற்றி
பேச செய்யாது அழித்தல்
தன்னை
அரசனே கண் உறங்கினாலும்
அவன் மனம் உலகையாளும்
கண்
இமையா தெய்வத்தாலே அசுரர்
கை அறங்கள் காக்கா 123
தீயினை கை தொட்டால்
சுடும் மன்னன் சினத்தீ
வேரோடழிக்கும்
மணந்த மனையாளை
விட்டோன் மன துன்ப நோயால்
சாவான்
நம்பியவரை வஞ்சித்தோனும்
நாடியே பிறன்மனை சேர்ந்தோனும்
இம்மையில் குஷ்டநோய் தாக்கி மறுமையில்
நரகம் அடைவர் 124
ஆற்றலில் மிக்க அமைச்சன் அறம் ஓம்பும் தருமதத்தன்
அறிவுரை இன்னும்
பல கூற அனைத்தையும் புறத்தே
தள்ளி
விற்புருவம் நெறிந்து
உயர விழிகளில் தீப்பொறி
பறக்க
வேந்தனும் வானுலகு
செல்வான் நான் புவியாள்வேன்
என்றான் 125
கொடியவன் கட்டியங்காரன்
கொண்டனன் மனதில் சூழ்ச்சி
அரசனை சார்ந்தோரெல்லாம் அடைத்திட்டான்
சிறையில் தள்ளி
அவன் சொல்லைக்
கேட்டோர்க்கெல்லாம் அளித்திட்டான் பதவி பொருளை
சேனைகள் சூழச் சென்று
சூழ்ந்திட்டான் சச்சந்தன் மனையை
126
வாயில் காப்போன்
விரைந்து வந்து வேந்தனை பணிந்து
சொன்னான்
நெடுநில மன்னா போற்றி நீண்டமுடி
அரசே போற்றி
நல்லற வேந்தே
போற்றி நெறிநிறை மார்பா
போற்றி
கட்டியங்காரன் படைகள் உமை வெட்டிட வந்துள்ளது என்றான் 127
பூமியில் பிறப்பும்
இறப்பும் அவரவர் வினைப்பயனாகும்
பொன்பொருள் வரவும் நீக்கம் முன்பிறப்பின்
நல்தீவினையே
நடப்பது வினையின்
செயலென நீக்கிடு உன் நெஞ்சக் கவலையை
அரசியின் அருகே வந்து நின்று அன்புடன் தழுவிச் சொன்னான் 128
நல்வினைப் பயனால்
நமக்கு அமைந்தது மயில்பொறி
ஒன்று
மயில்பொறி ஏறி அமர்ந்து மாளிகையை
விட்டகல் என்றான்
பஞ்சமந்திரத்தை நாவிசைக்க
பத்தினியும் பொறி மேல் அமர
விசயையும் ஐந்தெழுத்தைக் கூற விண்ணிலேபறந்தது
மயில்பொறி 129
குவளைமலர் விழி வழியும் கொதிவெப்பக்
கண்ணீரோடு
விசயை வானில்
சென்ற பின்பு வேந்தனும்
கடுங்கோபத்துடன்
கூர் படிந்த வாளை உருவி கேடயத்தை
பரிதியாய் சுற்றி
இடி
முழங்கும் சிங்கமாகி சிதறச்
செய்தான் எதிரி படையை 130
வேந்தனின் சீற்றம்
கண்டு விற்படை அம்புகள்
பொடிய
மன்னனின் வாளின்
வேகம் மதகரி மத்தங்கள்
பிளக்க
தனியொரு ஆளாய் நின்று சாய்த்ததால்
துரோகிப் படையை
கட்டியங்காரன் சினந்து
களிறினை செலுத்தி வந்தான் 131
உள்ளிருந்த சக்கரத்தால்
மன்னனின் கேடயம் பிளக்க
வெகுண்டெழுந்த சச்சயந்தன்
வெட்டினான் அவன் களிறை
வீரவாள் முறிந்து
போக எதிரி வீரர்கள்
விரைந்து சூழ
பாரதப்போரில் அபிமன்யுவாய் பார்வேந்தன் தனியே நின்றான் 132
சக்கரமும் வேலும்
உடலை தாக்கியே பிளந்து
அழுத்த
உடல்
சோர்ந்தும் மனம் தளரா மன்னனும் சினந்து
நோக்க
வெங்கதிரோன் மறைவது
போல் வேந்தனவன் உயிர் பிரிய
ஏமாங்கத்தின் சான்றோர்கள்
கைகுவித்து புலம்பினார்கள் 133
முத்து மாலைகள் அணிந்து
வெண்கொற்றக் குடையின் கீழ்
பாய்ந்திடும் பரிகள்
பூட்டிய பொன்வேய்ந்த தேர் அமர்ந்து
அம்பினை மழையாய்
பெய்து எதிரியை நடுங்கச்
செய்யும்
சச்சந்தன் எல்லாம்
விட்டு தரை சாய்ந்து போரில் மாய்ந்தான் 134
நிலமகள் மடியில்
வீழ்ந்த நெறிநிறை சச்சந்தன்
உடலை
ஈமப்படுக்கையில் கிடத்தி
அரண்மனை அழகு மகளீர்
கயல்விழி நீரைக்கொட்டி
காவலன் உடலைக் கழுவி
கார்முகில் மின்னலைப்
போல் குழல் கலைய புலம்பினார்கள் 135
தந்திர சிறுநரி
ஒன்று ஆண் சிங்கத்தைக்
கொன்று விட்டு
சிங்கத்தின் இருப்பிடத்தில் சிறுநரி
அமர்ந்தது போல்
அறமற்ற கட்டியங்காரன்
அரண்மனை வந்து சேர்ந்து
யானை
மேல் முறசறைந்து ஏமாங்கதத்தின்
வேந்தனானான் 136
சீவகன் பிறப்பு :
மனம் கொண்ட கலக்கத்தாலும் உடல் இருந்த தளர்ச்சியாலும்
வான்
பறந்த மயில்பொறியை தென்றலென
செலுத்தி செல்ல
கட்டியங்காரன் வெற்றி
முரசு கடல் சீறும்
ஒலியாய் கேட்க
வேல்
பட்ட பெண் மானாய்
வீழ்ந்திட்டாள் மனம் மெய் சோர 137
மூர்ச்சித்து விசயை சாய்ந்ததாலே பொறிவிசை
இடபுறம் அழுந்த
நகர்
தாண்டி சென்ற மயில்பொறி தரை தாழ்ந்து மெல்ல இறங்கியது
இறங்கிய இடமோ இருட்டில் சுடுகாடு
என்று அறியாமல்
மயில்பொறி ஆசனத்தில்
மயக்கத்தில் விசயை இருந்தாள் 138
வானத்து மேகம் போல பிணப் புகை சூழ்ந்திருக்க
பேய்களும் நடுங்கும்
அந்த பாழும் சுடுகாட்டின்
நடுவில்
இருளின்றி ஒளி பரப்பும் மணி விளக்குகள் சுடர் எழுப்ப
ஜீவகன் பிறந்தான் அங்கு திருமகளோ துன்பம் மறந்தாள் 139
என் மகன் ஏமாங்கதத்தில் இளவரசாய்
பிறாந்திருந்தால்
ஈராறு வருடங்களுக்கு
இறை தரல் நீங்கியிருக்கும்
பகையரசர் சிறையை
விட்டு தங்கள் நாடு சென்றிருப்பர்
பொற்குவியல் தினம் தினமும் மக்களுக்கு
கொடுத்திருப்பார் 140
பொன்மணிகள் நீ அணிந்து பொன் இழைத்த தொட்டிலிலே
சுற்றி நின்று
உறவினர்கள் சுந்தரமாய் தாலாட்டு
பாட
நிமித்திகர்கள் கூடி அங்கு உன் ஜாதகத்தை கணித்திருக்க
பாவலர்களும் புலவர்களும்
பொன்குவியல் பெற்றிருப்பர் 141
ஊளையிடும் நரி முழக்கம் பிணம் வேகும் நெருப்பொளியும்
கோட்டானின் குரல் ஒலியும் பேய் உலாவும் நிழல் அசைவும்
வெண்பஞ்சி மெத்தையின்றி
சுடுகாட்டு மேடையிலே
என்
தீவினையின் பாவத்தால் பிறந்திட்டாய்
என்று அழுதாள் 142
சுடுகாட்டில் தெய்வத்தின் உதவி :
ஏமாங்கத நாட்டின்
ராணி எழில் மங்கை விசயமாதேவி
தன்
மகனின் நல்வினையை தன் மனம் உணர
முடியாமல்
என் செய்வேன்
இவன் வளர என்றெண்ணி
அழுகையிலே
செண்பகமாலை எனும் பெயரில் கூனியாய்
தெய்வம் வந்தது 143
சுடுகாட்டில் உறையும்
தெய்வம் இவள் துணைக்கு
வந்ததனால்
உள்ளத்து கவலை தனை உதறினால்
சிறு பொழுது
தெய்வ வடிவில்
வந்த தேவி செப்பினாள்
விசயை இடம்
செந்தாமரை வாழ் திருமகளே
இத்துன்பம் எனது பாவம் என்றாள் 144
உன் திருமகன்
சொல் கேட்டு இப்புவியுலகம்
அடிபணியும்
அறமற்ற பகைவனை
அழிக்க அடலேறு போல் வளர்வான்
இவன் வளர்ந்து
ஆளாக இப்போது ஒருவன்
வருவான்
இவனை
எடுத்து செல்வதை காண்போம்
மறைந்து என்றாள் 145
மழலையை விட்டு
வைக்க மலரனைய மெத்தை
செய்தாள்
தாய்
பால் ஊட்டி விட்டு தங்கமகன்
வாய் துடைத்தாள்
பாலகனை மெத்தையில்
கிடத்தி பல மணிகள்
தெளித்து வைத்தாள்
சச்சந்தன் மோதிரத்தை மகவின் கை பதித்து மறைந்து நின்றனர் 146
கந்துக்கடன் மேற்கொண்ட கடமை :
இருள் கொண்ட சுடுகாட்டில் ஒளி கொண்டு இருள் கிழிய
கந்துக்கடன் எனும் வணிகன் கரிய உடை
கை வாளோடு
ஒளிவந்த திக்கை
நோக்கி ஒருவனாய் தனியே சென்று
இளங்காலை ஞயிறு போல் இருந்த மழலையை
கண்டான் 147
முத்திரை மோதிரத்தை
எடுத்து மறைத்து கொண்டான் தன்னகத்தே
இருகையால் அவனை அள்ளி தன் மார்பில் சேர்த்தணைக்க
தும்பியது அக்குறு
மழலை சீவ என வாழ்த்தியது அத்தெய்வம்
பகை
அறுப்பான் வேருடனே என பெற்ற மனம் வாழ்த்தியது 148
துஞ்சி விட்ட தன் மகனை சுடுகாட்டில் விட்டு
விட்டு
நன்மணிகள் சிறப்புடைய
இம்மகனை எடுத்துக் கொண்டு
மகனை இழந்த மனைவியிடம் அம்மகவை
கையில் கொடுத்து
நின்
மகன் சாதல் இல்லா நன்மகன் தான் என்றுரைத்தான் 149
சுநந்தை மனம் மகிழ்ச்சியிலே சுந்தரனை
கை வாங்க
வலம்புரி சங்குகள்
முழங்க வாத்திய கருவிகள்
ஆர்த்தன
மன்னனின் மறைவினாலே
நாட்டில் அழுகுரல் துன்பக்
காட்சி
கந்துக்கடன் மகன் வரவால் மகிழ்ச்சி
ஒலி பரவலாச்சி 150
செல்வனான கந்துக்கடன்
சீவகனை வளர்த்தல் எண்ணி
பொன்
குவிந்த நிதியறையை பொங்கும்
மகிழ்வில் திறந்து
இரப்போர்க்கும் வறியவர்க்கும்
இரவு பகல் பேதம் இன்றி
அள்ளி அள்ளி கொடுத்து அகமகிழ்வில்
கை சிவந்தான் 151
நெஞ்சம் நிறந்த
சச்சயந்தன் நிலவுலகை விட்ட துன்பம்
கல்
நிறைந்த மயானத்தில் குலவிளக்கை
பிரிந்த துயரம்
நான் செய்த தீவினையால் நேர்ந்ததென்று
புரண்டு அழ
தொடக்கமுதல் முடிவுவரை
நடப்பதை கூனி சொன்னாள் 152
சீவகனின் பெருஞ்சிறப்பை
தெய்வம் சொல்ல கேட்ட விசயை
இனி
செய்யும் செயல்களை எனக்கெடுத்து
உரையும் என்றாள்
இவ்விருளை போர்வையாக்கி
அழகு நிறை மணல் கடந்து
அமரிகை ஆற்றைக்
கடந்து மறுகரை செல்வோம்
என்றாள் 153
ஐபத்து யோசனைகள்
நடந்தால் அழகு மதில் கோபுரத்துடன்
தாணிதிலகம் நகர் வரும் தங்க வேண்டாம் அந்நகரில்
வண்டுகள் மொய்க்கும்
வனமும் நீர் வற்றா பொய்கையுடன்
தவம்
செய்வோர் வாழுகின்ற தண்டகாரணியம்
அடைவோம் 154
இளவம் பஞ்சு திரள் பாதம் வாள் பருக்கை
கல் பதிய
கொடி
போன்ற இடை வாட குருதி சிந்தும்
பாதத்துடன்
காட்டுவழி தனில் அசைந்து அமர்ந்து
நடந்து சென்று
கைவீசி மெய் சோர்ந்து தவப்பள்ளி
சென்றடைந்தார்கள் 155
மாதவம் செய்யும்
பெண்டீர் எதிர் சென்று அழைத்து
வந்து
பாதங்கள் துன்பம்
போக்கி பாவையின் கருத்தறிந்து
இப்பிறவி துன்பம்
நீங்க திருவற வழியில்
செல்ல
வளர்பிறை நல்ல நாளில் அணிகலன்கள்
களைந்தார்கள் 156
நற்மணம் கமழும்
குழலை சிரம் தனை விட்டு நீக்கி
மதிமுகம் திலகம்
தன்னை மென்விரலால் அழித்து
போக்கி
காதணி குண்டலத்தையும் கழுத்தணி மாலைகளையும்
கணத்திடும் உள்ளத்துடன்
கழற்றினார்கள் விசயைக்கு அங்கு 157
கைவளைகள் உடைத்து
நீக்கி இடை கொண்ட மேகலை போக்கி
தொடையணி குரங்கு
செரியும் காலணி சிலம்புகள்
கழற்றி
உடல் கொண்ட அணிகள் துறந்து
பூ உதிர்ந்த கொடியைப் போல
வெண்
நிற துகில் உடுத்தி
தவமகளாய் காட்சி தந்தாள் 158
கூற்றுவனும் கண்டு அஞ்சும் வேல் உடைய கந்துக்கடனும்
கணவனின் சொல்லை
மீறா கற்புடைய நிறை சுநந்தையும்
சுற்றமும் நட்பும்
கூடி விரும்பிய சான்றோர்
சேர்ந்து
தெய்வம் அன்று கூறிய சீவகன்
என பெயர் இட்டார்கள் 159
ஆயர்பாடியில் அன்று வளர்ந்த நந்தகோபன்
மகனைப் போல
சுநந்தையின் தாய்ப்பால்
பருகி சீவகன் வளர்ந்து வந்தான்
கல்வி கற்கும்
பருவம் வர கலைச்செல்வி
ஞானப் பெண்ணை
கந்துக்கடனும் அவன் மனைவியும் மணம் செய்ய விரும்பினர் 160
நம்பியும் அச்சணந்த அடிகளும்
:
பொன்மணி முத்துக்களை
குறுணி அளவு பரப்பி
வைத்து
பொன்
மாலை கழுத்திலிட்டு செம்பொன் எழுத்தாணி
கொண்டு
பசும்பொன் ஓலையிலே
பாலகன் எழுதினான் ஓம் ஸித்தந்நமஹா
பெற்றவரும் உற்றவரும்
பெருமையுடன் பார்த்து நின்றார் 161
எட்டெட்டு கலைகளையும்
இயல்புடனே கற்று உணர்ந்து
யானை
குதிரை ஏற்றம் தேரோட்டம்
வெற்றி பெற்று
படைக்கலப் பயிற்சிகளை
பார்வேந்தன் போல் பயின்று
நிலமகள் நெற்றி
கொண்ட திலகமாக அவன் திகழ்ந்தான் 162
அவன் ஆசிரியர்
அச்சணந்தி அத்தனையும் கற்று தந்து
ஆகம
நூல்கள் சொல்லும் அறவழியில்
நடந்து சென்று
நற்காட்சி நல் ஞானம்
நல்லோழுக்க குணம் கொண்டால்
நான்கு கதி உயிர்க்கெல்லாம் நல்லமுதம்
போலாகும் என்றார் 163
ஐம்பொறி அரவத்தினால்
அடைந்திடும் இன்பம் எல்லாம்
தீவினை நீத்தல்
இன்றி துன்பத்துக் கடலில்
வீழ்வர்
மனிதகதி ஒன்றில்
மட்டும் மோட்சமாம் வீடு கிட்டும்
அப்பிறவி பெற்ற பயனை அருகன்
நெறி பற்றி வாழ்வோம் 164
கருவறை என்னும்
வயலில் கருவென்ற முத்தை
விதைத்து
குழந்தையாம் நாற்றை
நட்டு குமரர் பருவ பயிர் வளர்த்து
தீவினை என்னும்
விலங்குகள் மனிதப் பயிறை மேயா வண்ணம்
ஒழுக்கமாம் வேலியிட்டால்
மோட்சமாம் கதிர்கள் கிட்டும் 165
நரகத்தை நாடிச்
செல்லும் தீவினை எல்லாம்
போக்கி
நற்காட்சி ஞானக் கதவில் நல்லொழுக்க
தாழ் பொருத்தி
நால்வகை சரணம் அடைந்து வீடு பேறடையும் நெறியை
அச்சணந்தி தன் மாணவனுக்கு ஐயமற விளக்கிச்சொன்னார் 166
அச்சணந்த அடிகள் சீவகனுக்கு
பிறப்பின் ரகசியத்தை உணர்த்தல்.
சீவகன் பிறப்பைப்
பற்றி சீவகன் தெரிந்து
கொள்ள
அச்சணந்தி அவனை அழைத்துச் சென்றார்
பூம்பொழிலுக்கு
நாற்புறமும்
நன்கு நோக்கி ஒற்றர்கள்
இல்லை என உணர்ந்து
சீவகனின் பிறப்பின்
கதையை தெரிந்திட உரைக்கலானார் 167
முதலமைச்சன் கட்டியங்காரனின் முறையற்ற
சூழ்ச்சியாலே
சச்சயந்த மாமன்னன்
தன் மனைவி விசயை கனவுக்குப் பின்
மயில்போறி ஒன்றமைத்து
மாளிகையை விட்டு அனுப்பி
வீரத்துடன் போர் செய்து வீழ்ந்திட்டான் அமைச்சனாலே 168
மயில்போறியும் இறங்கியது
மக்கள் புகா சுடுகாட்டில்
மாராணி பெற்றெடுத்தால் மதிமுகத்தில்
மழலை ஒன்றை
சுடுகாட்டு தெய்வம்
கூனியாய் விசயைக்கு உதவி செய்ய
மோதிர மணி முத்துடனே மகவை இட்டது இருக்கை
மேலே 169
மரித்து விட்ட மகனை
ஏந்தி ஒரு வணிகன்
அங்கு வர
தன்மகனை தரையிலிட்டு
தூக்கினான் அம்மகவை
தூக்கிய கண நேரத்தில் தும்பியது
அக்குழந்தை - அப்போது
வானத்தில் வாழும் தெய்வம் வாழ்த்தியது
சீவ என்று 170
தங்கநிற குழந்தையினை
தன் மனைவி கை கொடுத்து
நம்
மழலை இறக்கவில்லை இவன் நம் மகவு தான் என்றான்
அச்சணந்தி சொல் கேட்டு அவன் யார் என சீவகன்
கேட்க
நீ
தான் என்று கூறியதும்
நிலைகுலைந்து தரைசாய்ந்தான் 171
மயங்கி விழுந்த
சீவகனை மணநீர் தெளித்து எழுப்பி
விட்டு
உன்
பகைவன் இன்னும் உயிருடனே
இருக்கின்றான்
ஓராண்டு காலம் நீ பொறுத்திருக்க
வேண்டும் என்றார்
வில்
வல்லான் சீவகனும் விரும்பி
ஏற்றான் ஆணைதனை 172
அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறல்
:
வாணராசி ஆண்ட மன்னன் பரிதி ஒத்த உலோகபாலன்
மகனுக்கு தன் அரசு தந்து மாதவத்தை
ஏற்றுக் கொண்டான்
மெய் தவத்தான்
அரசனுக்கு தீவினையின் பயன்கள் சேர
யானைத்தீ என்னும்
பசியால் தவம் விட்டு
தெரு நுழைந்தான் 173
கந்துக்கடன் உணவருந்த
அமர்ந்திருந்தான் நண்பர்களோடு
பொற்கலத்தில் நல்லுணவை
பொன்வளை நங்கையர்கள் இட
நான் நின்றேன்
நடைதனிலே நல்லான்மா கந்துக்கடன் பார்க்க
நல்
உணவு அருந்த வருக என நட்போடு அழைதான்
என்னை 174
போது போதும்
என்னும் அளவில் பெய்தனர்
உணவில் நெய்யை
சக்கரைப் பாகை குடத்தில் பெய் பெய் என மகளீர் பெய்ய
கடலில் வெண்மலைகள்
இட்டு கடலினை தூர்ப்பது
போல்
விலாப்புறம் பெரிதும்
புடைக்க விருந்தினை விரும்பி
உண்டேன் 175
நிலமது தாங்கா
அளவு பொன்நிதி கொண்ட கந்துக்கடன் வீடு
அருகன்நெறி தவறா நடக்கும் அனைவருக்கும்
இல்லமாகும்
இல்லத்தில் உனைக் கண்டேன் என் யானைத்தீ பசி நீங்கியது
முரசொலி நாணும்
வண்ணம் உன் முழக்கம்
அன்று கேட்டேன் 176
அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல் :
முயன்றிடும் தவங்கள்
தாயாக எனை உருவாக்கிய
தந்தையானீர்
சீவகன் அச்சணந்த அடிகளின்
திருவடி தொழுது சொன்னான்
அடிகளோ அவனை வாழ்த்தி மனதினில்
பகைவர் அழிவை பொருத்தி
நான்
தவநெறி கொள்வேன் என்ற முடிவினை உரைக்கலானார்
177
அடிகளின் துறவு கேட்டு சுநந்தை
தீயிடை வெண்ணையானாள்
என்
மகன் சீவகனை விட்டு
செல்வதும் நலமோ என்றாள்
என் வினைகள்
எல்லாம் நீங்க என் தவம் ஒன்றே வழியென
மகாவீரரின் சமவசரணம்
நோக்கி மாமுனியும் நடக்கலானார்
178
நாமகள்
இலம்பகம் முற்றும்.
1. கோவிந்தையார் இலம்பகம்.
அச்சணந்தி பிறவி நீத்தல் :
ஆசையின் வேரினை
அறுத்து அருகனின் நெறியைப்
பற்றி
மகாவீரரின் மலரடி தொழுது மாதவ நோன்பை
மனதில் ஏற்று
நீரினில் தோன்றி
மறையும் நீர்குமிழி போன்ற மனிதகதியின்
பொய்யுடம்பை மண்ணில்
விட்டு வானவர் தொழ வீடடைந்தார் 179
சீவகன் குமரன்
ஆதல் :
நாகலோகம் ஒத்த ராசமாபுரத்தில் களிறுகளை
பிளிர்ந்திட விரட்டி
கொடி கொண்ட தேர்கள் செலுத்தி குதிரகள் மேல் காற்றாய் சென்று
படைகலப் பயிற்சிகள்
பெற்று பாட்டுடன் இசை யாழும் தேர்ந்து
மலையொத்த திண்தோளுடைய மாவீரனாய் சீவகன்
இருந்தான் 180
பகைவர்கள் அச்சத்தில்
பதுங்கும் பார்த்தனை ஒத்த சீவக
நம்பி
காமத்துக்கு மன்னன்
ஆன காமனோ இவன் என்றெண்ணி
காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கண்களை
கொண்ட கன்னியர்
கருத்தினில் காதல் துயரால் கலையிழந்து
வாடி வருந்தினார்கள் 181
வேடர் நிரை கவர எண்ணுதல்
:
மணமுல்லை மலர்களின்
மேல் மது உண்ணும்
வண்டினங்கள்
பசுக்கூட்டம் கன்றை எண்ணி பால் சொரிந்து நின்றதனால்
கார்கால மேகத்தின் மழை
என முல்லை அரும்புகள்
மலர்கின்ற
மலை
மேலே சிங்கம் நிகர் வேடுவர்கள்
கூட்டம் கூடினார்கள் 182
வேடர் நிமித்திகனை
இகழ்ந்து நிரை கொள்ள எழுதல் :
அரசனின் ஆநிரைகள்
வரும் இவ்விளவேனில் பருவத்தில்
ஆநிரையை கைப்பற்றி
அடைத்திடுவோம் நம்மிடத்தில் – என
வேடன் ஒருவன்
பகர்கையிலே பறவை ஒன்று ஒலி எழுப்ப
நிமித்திகன் அதை உணர்ந்து நேருவதை
சொல்லலானான் 183
ஆநிரைகளை நீர் கவர்வீர் அரசன் படை தோற்றோடும்
தேரினிலே ஒருவன்
வருவான் துரத்தி நம்மை வெல்வான்
என கூற
ஒற்றைத்தேர் உடையவன் பெரிய கூற்றுவனே
ஆனாலும் சோதிடா
எக்கேடும் நம்மைத்
தீண்ட வாரா கவர்வோம் ஆநிரை என்றார் 184
மது நிறைய குடித்தார்கள் பறை துடியை அடித்தார்கள்
வெற்றிமாலை சூடுதற்கு
கொற்றவையைத் தொழுதார்கள்
காரிப்புள் எனும் பறவை ஆநிரையில்
அழிவுகுறி காட்டியது
சோதிடன் சொல்கின்றேன்
நிறைந்த காவல் செய்யுங்கள் 185
வேடர் நிரை கவர்தல் :
வானமும் வான்மீனும்
போல் வனத்தில் பசுக்கள்
புல் மேய
வேடர்கள் அம்பு மழையால் இடையர்கள்
சிதறி ஓடினர்
தயிர் கடையும்
மத்தின பிணைந்திருக்கும் கயிறு போல
ஆநிரையை சூழ்ந்த
வேடர்கள் அனைத்தையும் ஓட்டிச்
சென்றார் 186
இடையர்கள் செய்தி
சொல்ல இடைச்சேரி துன்பங்கொள்ள
கன்றுகளைக் கட்டிக்
கொண்டு கதறினார்கள் பசுக்கள்
இன்றி
பாறையாய் தோய்ந்த
தயிரும் பால் நெய்யும்
ஆறுபோல் ஓட
அழிவுற்ற ஆயர் படை விரைந்தது
அகழிசூழ் மூதூரை நோக்கி 187
கட்டியங்காரனுக்கு செய்தி
சொல்லல் :
புறம் கண்ட இடையர் கூட்டம்
பூவிரி முல்லை நிலம் கடந்து
தேன்
சொரியும் தாமரைகள் திரண்ட
மருதம் நிலம் நீங்கி
சுறாமீன்கள் சுழன்று
சுற்றும் அகழி சூழ்ந்த
மூதூரில்
அரசனுக்கு செய்தி
சொல்ல காவலரை வேண்டி
நின்றார்கள் 188
வெண்சாமரை மகளீர்
வீச விரிந்த செவி குண்டலம் ஒளிர
அரியணையில் வீற்றிருக்கும் அரசன் கட்டியங்காரன் முன்னே
கைகுவித்து அடிவணங்கிய
காவலர்கள் கைகட்டி நின்று
ஆநிரையை வேடர் கொண்ட அதிர்ச்சியினை
அறிவித்தார்கள் 189
கட்டியங்காரன் படை தோல்வியுறுதல் :
செந்நிறம் கொண்ட விழிகளில் தீயெழச்
சினந்து நோக்கினான்
கொல்வதில் கூற்றுவனான
கொற்றவன் கட்டியங்காரன்
கடல் போல் பரந்திருக்கும் நால்படை
படை தலைவர்களையும்
காற்றென விரைந்து
சென்று கவருங்கள் ஆநிரையை
என்றான் 190
மும்மத நீர் கண்
பெருகும் குன்றொத்த களிறுகளுடனும்
போர்த் திறம் கொண்டிருக்கும் பரி கொண்ட தேர்களுடனும்
வேல் கொண்ட குதிரைப் படையும்
வாள் கொண்ட காலாட்படையும்
போர் முரசம் இடியாய் முழங்க பூமி அதிர
புறப்பட்டது அரச படை 191
புயலினால் பொங்கும்
கடல் போல் போரிடும்
அரசர் படையும்
மாரி போல் அம்பைப் பெய்து தாக்கிடும் வேடர்கள் படையும்
போரினில் மன்னன் சேனை அழிய
களிப்பினில் வேங்கையாய் வேடர் சூழ
பரிகளோடு களிறும் தேரும்
பனிமலைகளாய் சரிந்தது வீழ்ந்தன 192
வேடர்கள் வில்லின்
வேகம் வீசியது சூறைக்
காற்றாய்
பார்வேந்தனின் படைகள்
எல்லாம் பறந்தன காற்றின் தூசாய்
வேடர்கள் பசுக்கூட்டத்தோடு விரைந்தனர்
வெற்றி மாலையோடு
அல்லலில் வருந்தினான்
மன்னன் ஆழ்ந்திட்டன் துக்கம்
தன்னில் 193
நந்தகோபன் நிரை மீட்போர்க்கு தன் மகளை தருவதாக
முரசறைதல்
வாள் போன்ற விழிகளுடனும் மாசறுபொன்
மெய் ஒளியுடனும்
ஒடிந்திடும் துடியிடை
கொண்ட பூங்கொடியாள் என் மகளை
பசுக்கூட்டம் கவர்ந்து
வரும் பார்போற்றும் மா வீரனுக்கு
மணம்
முடிப்பேன் என்று கூறி முரசறைந்தான் நந்தகோபன் 194
சீவகன் போருக்கு
எழுதல் :
கருமுகில் மோதும்
போது கண் படும் மின்னலைப் போல்
தேன்
சொட்டும் மாலையணிந்த தேவன் ஒத்த சீவகனிடம்
ஆநிரையை கவர்ந்ததாலே அவ்வூர் படும் துன்பத்தை
எல்லாம்
நேர்பட ஒருவன்
சொன்னான் நிம்மதி வேண்டும்
என்று 195
எண்குண ஒழுக்கத்தாரையும் எல்லாம்
துறந்த துறவியரையும்
தாயொத்த பெண்களையும்
தழுவும் சிறு மழலைகளையும்
பால் தரும் பசுக்
கூட்டத்தையும் பல் அறங்கூறும் அந்தணரையும்
துன்பத்தில் காப்பேன்
என்று சூளுரைத்தான் சீவகன்
நம்பி 196
குதிரைகளை நுகத்தில்
பூட்டி தேரினை தேர்வு
செய்தான்
கையில் பெரும் வில்லை
ஏந்தி கணைகளை தேர்ந்தெடுத்தான்
பரிதியின் குளம்பால்
எழுந்த புழுதியால் ஞாயிறு மறைய
வந்திடும் சீவகனைக்
கண்டு சோதிடன் வேடரை தடுத்தான் 197
வேடர் போரில்
தோற்று ஓடுதல் :
வேந்தனின் படையை அழித்த வேடர்கள்
நாங்கள் என்று
துத்திரிக் கொம்புகள்
ஊதி கொக்கரித்து சீழ்க்கை
ஒலித்து
எதிரொலி எழும்புதல்
போல் சங்கு பறை கொம்புகள் ஊதி
வேடர்கள் வில் படையின்
மீது சீவகன் படையும்
மோதியது 198
சீவகனின் திண்ணியத்தேர்
திசையெல்லாம் காற்றாய் சுழல
எழும்பிய மண் புழுதியாலும்
எண்ணத்தில் மயக்கத்தாலும்
கருடனின் சிறகின்
ஒலியால் கருநாகம் அஞ்சியது
போல்
கருத்தில் அறம் இழந்த வேடர் கலங்கி வீரம் இழக்கலானார் 199
கார்கால பெரும்
மழையை காற்று சீறிச்
சிதறுதல் போல்
வேடர்கள் பொழியம்
அம்பை வில்லால் விலக்கிய சீவகன்
வேடர்கள் கை வில்லும் அம்பும்
வீரத்தால் தான் பொடியச் செய்ய
வேடர்கள் பசுக்களை
விட்டு வேகமாய் மறைந்தனர் வனத்தில் 200
இராகுவின் வாயில்
இருந்து மதியினை மீட்ட திருமாலாய்
வேந்தனின் படையை வீழ்த்தி வேடர்கள்
கவர்ந்த ஆநிரையை
சீவகன் தன் நண்பர்களுடன்
செவ்வனே மீட்ட செய்தி
கேட்டு
கோபித்தில் மன்னன் கொதிக்க குதுகலம் கொண்டது
நகரம் 201
கற்புடை மகளீர்
எல்லாம் மாலைகள் மாடத்தில்
கட்டி
அகிற்புகை சுண்ணம்
பொடியை அளவின்றி எங்கும்
தூவி
ஆநிரை மீட்ட சீவகன் ஆண்டாண்டு
வாழ்க என்று
வாழ்த்தியே வரவேற்றார்கள் மாடத்தில் மகிழ்ச்சியில்
நின்று 202
மதுவினை கொட்டும்
செவ்வாய் மழலையின் கொஞ்சும்
மொழியார்
பொன்னிற தனங்கள்
சுமையை தாங்கிடா இடைவெளிக்
கொண்டு
வெற்றியின் திலகம்
கொண்ட வேந்தனுக்கு நிகராய்
நிற்கும்
சீவகநம்பி பேரழகைக் காண பரத்தையர் தெருவில் நின்றார் 203
அல்குலாம் தேரின்
மீது அழகிய மணி மேகலைக் கட்டி
அடங்கிட கொங்கைகளை
பாய்ந்திடும் பரியாய் பூட்டி
புருவமாம் வில்லை
வளைத்து விழிகளை அம்பாய்
கொண்டு
காமனின் விலைமகளீர்
படை சீவகனின் எதிரியாய்
நின்றனர் 204
வள்ளல் போல் வாரி வழங்க மண்ணிலே
ஒருவன் இருப்பான்
கொல்லும் கொடிய வாட்போரில் கூற்றுவனாய்
இருப்பான் ஒருவன்
நுண்ணிய நூல்கள்
கற்றோர் உரைத்திட்ட சொற்கள் எல்லாம்
உன்னிலே நாங்கள்
கண்டோம் என தொழுதனர் மகளீர் சிலர் 205
விண்ணுலக தேவர் எல்லாம் வெற்றிவேல்
அழகன் என்றார்கள்
மண்ணுலக மக்கள்
எல்லாம் மதகளிறு போன்றோன்
என்றார்கள்
செம்மலர் அணிந்த
மார்பை செங்குன்று பாறை என்றார்கள்
சீவகன் நல்லழகைக் கண்ட மன்மதனின் மறுஉரு
என்றார்கள் 206
வெற்றியை மணந்த சீவகன் வெண்மணி
மாளிகை புகுந்தான்
புரவிகள் கட்டை அவிழ்க்க புகுந்தன
லாயம் தன்னில்
ஆயிரத்தெட்டு ஆரணங்குகள் எட்டுவித மங்கலங்களுடன்
எதிர்கொண்டழைத்து நம்பியை இன்முகம் மலர
வாழ்த்தினார்கள் 207
உயர்மிகு தாயும்
தந்தையும் உவகையில் எதிரில்
வந்து
ஒளிதரும் மணிகள்
அணிந்து ஒளிர்ந்திடும் சீவகநம்பியை
அழித்திடும்
கண்ணேறு போக்க ஆலத்தை சுற்றி எடுக்க
அடி தொழுத நின்ற சீவகனை
ஆரத்தழுவி ஆனந்தித்தார்கள் 208
ஆநிரை மிகுதி
கொண்டு ஆண்டுவரும் நந்தகோபன்
நம்பியே என் சொல் கேட்டு
நொடியில் நீர் மறப்பாயாக
நட்பினால் நாட்டின்
அழிவை நினைக்காத மன்னன் சச்சந்தன்
அரசை தந்தான் அமைச்சனிடம் அரசி விசயை மேல் காதலாலே 209
அரசனோ கொல்லப்பட்டான் அறம் மறந்த மந்திரியாலே
மலையுச்சி நாடி நான் சென்று மாய்வதற்கு அன்றே முயன்றேன்
பார்வேந்தனின் வாரிசை அறிந்து பின் மரிப்பதே நல்லதென்று
ஆல் விதை நம்பிக்கையால் அன்றகன்றேன் சாதலில் இருந்து 210
வேந்தனின் குடிவழி
வந்த ஆநிரைகள் கொண்ட என் பெயர்
கோவிந்தன் என்பதாகும்
கோமகள் கோதவரி என் மனைவி
வில்லொத்த புருவத்தின்
கீழ் கள்ளொத்த மை கண்களோடு
கொம்பொத்த இடையை கொண்ட கோவிந்தை
என் மகளாம் 211
வெண்ணை போல் குழைந்து வருடுதற்கு
மெய் இனியாள்
விரும்பிடும் பாலைப்
போல மொழிந்திடும் சொல்லுடையாள்
உருக்கிய பசுநெய்
போன்ற நிறங்கொண்ட மேனியுடையாள்
பொன்
பதுமைகள் ஏழுடன் தருகிறேன்
மணங்கொள் என்றான் 212
கயல்விழி கொண்ட மங்கை தினைபுனம்
காக்கும் நங்கை
வேடுவர் குலபெண் வள்ளியை வேல்முருகன் விரும்பி
மணந்தான்
ஆயர்குல பெண் நப்பினையை
அத்திருமாலும் ஆசையில் ஏற்றான்
குலத்தின் வேற்றுமை மறந்து கோவிந்தையை
ஏற்க என்றான் 213
பதுமுகனுக்கு மணம் புரிவிக்க சீவகன்
இசைந்து அவளை ஏற்றல்
:
சீவகன் சிந்தையில் கோவிந்தையை
பதுமுகனுடன் சேர்க்க எண்ணி
மாமனே
உன் மகள் எனக்கு நெற்றிச்சுட்டும் கண்ணியுமாவாள்
என் உயிர்நண்பன்
பதுமுகனோ என்னை நிகர்த்த வீரன் ஆவான்
அவன் மணப்பான் உன் மகளை என கூற இசைந்தான் கோபன் 214
சிறு நூதலும்
வளை புருவமும் காமனின்
கை வில்லைக் கொல்லும்
குவளைமலர் இருவிழிகள்
கடல் கயல்மீனைக் கொல்லும்
மொழிகின்ற சொல் அனைத்தும்
முக்கனியின் சுவையை கொல்லும்
கோவிந்தையின் முழு அழகும் கண்டவர்கள் உயிர் கொல்லும் 215
மணம் வீசும் பசு
நெய் தடவி கருங்கூந்தல்
அணிசெய்து
செவியிரண்டில் மங்கலத்தின்
காதணிகள் நிறைவு செய்து
சந்தனத்தை எடுத்து
வந்து கை குழைத்து
அங்கம் பூசி
மணக்கோலம் செய்து
வைக்க மலைத்து விட்டார் அனைவருமே 216
பதுமுகன் இன்பம்
நுகர்தல் :
பசும்பொன் பதுமைகள்
ஏழுடன் இரண்டாயிரம் இளம்பசுக்கள்
சீதனமாய் ஆயர்கோன்
தந்து செல்வமணம் செய்து
வைத்தான்
மலர்கணையான் படைமுழுதும்
பதுமுகனை சாய்த்து வீழ்த்த
கோவிந்தையின் மென் மடியில் கோமகனும் மயங்கி
வீழ்ந்தான் 217
ஆயர்குல நல்அழகி
இவள் பாற்கடலின் அமுதம்
இவள்
தேன்
சிந்து செவ்வாயுடைய செங்கமல இதழும்
இவள்
திருமகளே மனம் தேடி வந்த ஒரு மகளாம் இவள் அழகை
பதுமுகன் மெய் பருகியதால் பாவை மடியில்
உணர்விழந்தான் 218
கோவிந்தையார் இலம்பகம் முடிவுற்றது.
3. காந்தருவதத்தையார் இலம்பகம்.
சீதத்தன் பொருள் ஈட்ட கடல் கடந்து போதல் :
சீவகன் அனைவருடனும் சிறப்புடன் வாழ்க்கை வாழ்கையிலே
யவதத்தன் மரபில் உதித்த சீதத்தன் எனும் வணிகன்
ஒளிர்கின்ற பொன் அணிகள் உடல் கொண்ட பதுமை மனைவி
பொருள் திரட்ட சீதத்தன் புறப்பட்டான் கப்பலிலே 219
முயற்சி உள்ளம் உடையான் முயற்சித்தால் மேல் மேலும்
தினம் தினம் வெள்ளமென சேரும் நிதி அவனிடத்தில்
மதிகெட்டார் சொல் கேட்டு மனச் சோம்பல் கொண்டோர்கள்
இகழ்ச்சியில் தலை கவிழ்ந்து இழிநிலை அடைவார்கள் 220
தனம் அது பகையை வெல்லும் தன் இடமிருந்தே உயிரை கொல்லும்
செல்வம் நல்அறம் வளர்க்கும் அறத்துடன் இன்பம் செழிக்கும்
முயற்சியில் கிட்டும் செல்வம் முழுமையான உண்மை செல்வம்
முறையற்று பெரும் செல்வம் நிலையற்று போகும் செல்வம் 221
பெரும்பொருள் கலத்தில் ஏற்றி வறியோர்க்கு தானம் தந்து
கடல் கால நிலை கணித்து கடற்கரைக்கு வந்தான் சீதத்தன்
பாய்மர பாய்கள் ஆய்ந்து கட்டி கொடிகளை மரஉச்சியில் ஏற்றி
கொம்பு சங்கு பறை முழங்க களிறு போல் கலம் கடலோடியது 222
மின்னொளி மதிமுகமும் மென்மலர் அனைய உடலும்
தென்றலில் ஆடும் கொடியாய் அன்னத்தின் நடையுடனும்
மங்கையர் மிகுந்து வாழும் மலர்வனம் போலிருக்கும்
பொன் விளையும் ஓர் தீவை பெருசீத்தத்தன் கண்டான் 223
புயல் காற்றினால் கலம் கவிழ்ந்தது :
அழகிய முத்து மாலைகளை அரசனுக்கு காணிக்கையாக்கி
அவன் அருள் பெற்று சிலநாள் அத்தீவில் சீதத்தன் தங்கியபின்
ஆறு திங்கள் கழிந்த பின்நர் அவன் ஈட்டிய பொருள்களோடு
அரசனின் அனுமதி பெற்று அவன் நாடு திரும்பலானான் 224
கலம் அது கடலில் செல்ல களிப்பினில் இருந்தோர் ஆட
கருமுகில் கூட்டம் பரவி காரிருள் போலத் தோன்ற
எண்திசையும் காற்று கூட கடல் அலை மேலே பொங்க
கப்பலோ தன் அமைதியற்று கடும் சுழலில் சிக்கி ஆடியது 225
முன்வினை நல்பயனால் நடுகடலில் அழுந்தினாலும்
நல்லவர்கள் பிழைத்திடுவார் நடுங்கிட வேண்டாம் என்றான்
அசோகமர நிழலில் அமர்ந்த அருகன் திருவடி நினைத்து
அச்சத்தைப் போக்கிடுங்கள் அருகன் அருள் காக்குமென்றான் 226
கடல் காற்று புயலாய் மாறி கலத்தின் கயிறுகளை அறுந்திட
பாய்மரங்கள் முறிந்து விழ பிடிப்பின்றி கலம் சுழன்று ஆட
பேய் காற்றில் சிக்கி நின்ற பெருமரம் சாய்ந்ததை போல்
கப்பலும் கடலில் மூழ்கிட கலம் இருந்தோர் மூழ்கினார்கள் 227
பாய்மரத்தின் துண்டு ஒன்றை பற்றிக் கொண்ட சீதத்த வணிகன்
அருகன் அருள் அமைந்ததாலே அவன் சேர்ந்தான் கரையினிலே
என் வினைதான் என்னை இங்கு ஏந்தி வந்து சேர்த்தது கரையில்
என்னைக் காக்க ஏதேனும் கலம் என்று வருமோ என நினைத்தான் 228
தரனிடம் தன் வரலாறை கூறல் :
தீவினில் தனியே சீதத்தன் தன் சிந்தையில் வருத்தங் கொண்டு
உதவுவார் யார் வருவர் என உள்ளத்தில் ஏங்கி இருந்தான்
தரன் என்னும் பெயருடைய அத்தீவினில் வாழும் ஒருவனை
கண்ணுற்ற சீதத்தன் அவனிடம் கலக்கத்தில் தன் கதை கூறினான் 229
பொருள் தேடி சென்றதையும் கலம் கவிழ்ந்து வீழ்ந்ததையும்
அறவழியில் ஈட்டிய பொருள்கள் அத்தனையும் அழிந்ததையும்
தான் பட்ட துன்பங்கள் எல்லாம் தரனுக்கு உரைத்ததின் பின்னர்
தரன் அவனுக்கு உதவுவதாக உறுதி கேட்டு உளம் மகிழ்ந்தான் 230
தரன் அவனை ஊருக்கு அழைத்து செல்லுதல் :
வித்தைகள் பலவும் கற்று தேர்ந்த நல்ல ஒரு வித்தகன் நான்
கடல் அமிழ்ந்த தோழர்களையும் கடல் கொண்ட பொருள்களையும்
இமைப்பொழுதில் மீட்டிடுவேன் இழந்ததற்கு துன்பம் வேண்டாம் - என
நல்லுரைகள் பலவும் கூறி நல்லுறுதி தந்தான் தரன் 231
நறுமணம் கமழும் சோலைகளும் நல்ல நீர் ஊற்றுகளும் கொண்ட
இம்மலை மீது ஏறி செல்ல மனதினில் துணிவு கொள் என
குதிரையின் வடிவில் ஒத்த ஆட்டுகடா ஒன்றில் ஏறி
வான் வழியே பறந்து சென்று மலை உச்சி வந்து நின்றனர் 232
கண்டாலே இனிமை தரும் காண்பதற்கு அரியதாகும்
தாமரை பூவில் வாழும் திருமகளும் ஆசை கொள்ளும்
மரங்களில் தொங்கும் கனியை சீதத்தன் பறித்து உண்டு
பாற்கடல் அமிர்தம் உண்ட பரவசத்தில் அகமகிழ்ந்தான் 233
நகர் தோற்றம் :
இன்பத்தை அள்ளித் தரும் இடங்களை எல்லாம் ஆய்ந்து
இன்பம் நுகர் பொருள்களை அறிந்து அதை குணம் அளந்து
அத்தனையும் ஒருங்கே சேர்ந்த அழகிய ஒரு நகரத்தை
வானத்து தேவர் கூடி வடிவமைத்தாரோ இந்நகரை 234
இளங்கதிரோன் பரிகளை சேர்த்து இந்நகரின் மதிலாய் அமைத்து
மதில் கொண்ட பூங்கொடிகள் மதியை பெண் முகமாய் கருதி
தன் கையை மேல் நீட்டி அதை தடவுவது போலிருக்கும்
பொன்னகரின் மதில் அழகை போற்றாதார் யாரும் இல்லை 235
கன்னியர் மேகலை ஒலியும் கால் சிலம்புகள் பரல் ஒலியும்
யாழ் குழல் இசையின் ஒலியும் முழவுடன் வெண்சங்கொலியும்
பொன்னகரில் தினம் ஒலித்து பேரழகு நான் தான் என்று
வாய் திறந்து கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் அந்த அழகு நகரம் 236
செம்பொன் மாடங்களில் உள்ள பசும்பொன் தூண்கள் மேலே
ஆதவன் கதிர்கள் தாக்க அப்பொன் உருகி பூத்து நிற்க
மருண்ட மான் விழிகள் கொண்ட மங்கையர்கள் அருள் நோக்கால்
வெம்மையும் தணிந்து போக வெங்கதிர்கள் நாணியன 237
பொன்மாலை அணிகலன்கள் பொதுவழியில் விழுந்து கிடக்க
எடுப்பார்கள் யாருமின்றி விண்மீனாய் தரை ஒளிக்க
தேவேந்திரன் மணிச் செப்பு வாய் திறந்தாற் போலிருக்கும்
விண் மண்ணுக்கு இடையான வித்யாதரர் வாழும் உலகு 238
பொன்னகர் மேல் பறந்து சென்று பொங்கிடும் எழிலைக் கண்டு
சீதத்தன் மயங்கி இருக்க தரன் பறந்த வாகனமோ
மழை முகில் தவழ்வதாலே மின்னல் ஒளி பெற்றிருக்கும்
தரனின் பொன் மாடத்தின் தளம் மேலே இறங்கியது 239
வித்தியாதரர் விந்தை உலகின் வேல்வேந்தன் கலுழவேகன்
கரம் பிடித்த காதலி தான் பெருமை மிக்க தாரணியாம்
கலுழவேகன் தாரணியின் காதலிலே பிறந்தவள் தான்
காந்தருவதத்தை என்னும் கட்டழகு பெண் மகளாம் 240
எள்விழ இடமின்றி மலையில் எல்லா நாட்டு மன்னர்களும்
பெண் பிறந்த நாளன்றே பேரணியாய் திரண்டு வந்து
பொன்னோடு பொருள்களையும் பசும்பொன் அணிகலன்களையும்
வேழத்தின் மீதுதமர்ந்து வேண்டுவோர்க்கு கொடுத்தார்கள் 241
வித்யாதர மன்னன் கலுழவேகன் செப்பினான் தன் நிமித்திகனிடம்
வான் கோள்கள் துணைகொண்டு வரைந்திடுக ஜாதகத்தை என்று
வானவில்லாய் புருவம் கொண்டு வசீகரிக்கும் விழிகள் கொண்ட
இப்பெண்ணின் நல்பயன்கள் ராசமாபுரத்தில் என உரைத்தான் 242
வெண்பட்டுத் துகில் விரித்து பஞ்சொத்த மலர்கள் தெளித்து
பசும்பொன் கட்டிலின் மேல் பாவையர்கள் கவரி வீச
அரசன் கழுலவேகன் மகிழ்ந்து அமர்ந்திருந்த வேளையிலே
சீதத்தன் அழைத்து கொண்டு வந்தான் வேந்தன் முன்பு செல்வோம் 243
சிற்றரசர்கள் மணிமுடிகள் தினம் பட்ட காரணத்தால்
சிவந்து செம்பொன்னாய் ஒளிவீசும் செவ்வடிகளை
கை குவித்து வணங்கிய பின் கனிமொழியில் முகமன் கூற
அரசனோ அவ்விருவரையும் அமர்க என அருள் மொழிந்தான் 244
தேனில் தோய்ந்த சொல்லால் சீதத்தன் நலங்கள் கேட்டான்
இன்றய நட்பல்ல நமது ஏழுதலைமுறை தொடர்ந்ததென்றான்
மன்னன் நான் வணிகன் நீயென மனதினில் கலக்கம் வேண்டாம்
நின் வீடு இதுவென்றெண்ணி மகிழ்வு கொள் என்றான் வேந்தன் 245
பட்ட சந்தனமரம் மழையால் பசுந்தளிர் கொண்டது போல்
சீதத்தன் மனம் குளிர்ந்தான் மன்னனை நோக்கிச் கூறினான்
தங்களின் சொல்லைப் போல என் தந்தைக்கு தந்தை சொன்னார்
நின் திருவடி சேவைக்கு என் தலைமுறை இருக்குமென்றான் 246
கலுழவேகன் அவன் கைபிடித்து அழைத்து சென்றான் மனைவியிடம்
தாரணியும் முகமலர்ந்து தனியன்பில் வரவேற்றாள்
முழுமதி போல் முகத்துடனும் கெண்டை மீன் விழிகளுடனும்
கருங்குழலுடைய இவள் என் காந்தர்வதத்தை மகளாவாள் 247
வீணைக்கு உரியவள் தான் வெண் தாமரை வாழ் சரஸ்வதி
சரஸ்வதியே தன்னை மறப்பாள் இவள் இசைக்கும் வீணையாலே
இன்று முதல் இவள் உன் மகள் இசைந்து நீ ஏற்றுக்கொள்வாய் - இவளை
வீணை இசையில் வெல்லும் இசைவேந்தனுக்கு மணமுடிப்பாய் 248
இவ்வின்ப உலகத்தில் இன்பத்தை இடரின்றி பெற்று வாழ்ந்தாலும்
துணையற்ற தனிமையினால் கொடுந்துன்பம் வேறில்லை
கனிமொழி கன்னியர்கள் கணவன் மடி துயின்றால் தான்
இந்திரலோகத்தின் இன்பம் ஈட்டி வந்தது போல் இருக்கும் 249
காந்தர்வதத்தையின் தாதியை கலுழவேக வேந்தன் அழைத்து – இனி
தந்தையும் தாயுமாய் இருந்து தன்மகளை பேணச் சொன்னான்
கலம் நிறைய பொன் செல்வம் காலத்திற்கும் நல்கியுள்ளேன்
மனம் ஒத்து நீங்கள் இருவருமே சீதத்தன் நல்லுரையை ஏற்றிடுவீர் 250
தத்தை தத்தைபோல் வந்து தந்தையை வணங்கி நின்றாள்
தந்தையோ அன்பில் மகளை தழுவினான் பிரிவின் சுமையால்
வலம்புரி சங்கு ஈனும் முத்துக்கள் மண்ணுலக மக்களுக்கு மட்டுமே
பெண்களைப் பெறும் பெற்றோர் பெறும் பயன்கள் அவ்விதமே 251
நிமித்திகன் சொல்லிய வழியில் என் மன்னன் கலுழவேகன்
அன்புடை சீதத்தனை இங்கு அழைத்து வர ஆணையிட்டான்
கலத்தையும் மூழ்கச் செய்து உனை மட்டும் பிழைக்கச் செய்து
கண்கட்டும் என் மாயத்தால் கவர்ந்தேன் உனை என்றான் தரன் 252
துன்பங்கள் எனக்கு தந்தாய் மன்னன் நட்பை பெற்று தந்தாய்
என் கலத்துடன் நண்பர்களை பொருள்களுடன் திருப்பி தந்தாய்
வித்யாதர வேந்தன் ஆணையால் தரனே உன் துன்பம் எல்லம்
என் மனம் குளிர இன்பமாக்கி என் குலத்தை வாழச்செய்தாய் 253
காந்தர்வதத்தைக்கு தாதியுடன் கலம் அளவு பொன்னும் பொருளும்
அன்புடன் அண்ணல் தந்தான் அரசியும் மனம் மகிழ்ந்து நின்றாள்
சீதத்தன் திருமகள் தத்தையோடு சீர்மிகு விமானத்தில் அமர்ந்து
முரசொடு சங்கொலிக்க புறப்பட்டு தன் மனைமகிழ்ந்து சேர்ந்தான் 254
பசும்பொற் கொடியை ஒத்த பதுமையாம் அவன் மனைவியை
அன்பு கொண்டு ஆரத்தழுவி அரும்பிரிவு துன்பம் போக்கி
காந்தருவதத்தையைப் பற்றி பதுமைக்கு எடுத்து சொல்லி
கந்தர்வலோகம் போன்ற கன்னிமாடத்தில் தங்க வைத்தான் 255
சுயவர மண்டபம் அமைத்தல் :
பாற்கடல் அமுதம் தன்னை செப்புக்குள் வைத்தது போல்
பாவையரும் பார்த்து மயங்கும் பேரெழில் கொண்ட தத்தைக்கு
திருமணம் செய்ய எண்ணி கட்டியங்காரனை காணச் சென்று
இச்சையை சீதத்தன் சொல்ல இனிதே நீர் செய்க என்றான் 256
காசறு பொன்னால் இழைத்து காண்பவர்கள் கண்கள் மயங்க
வானமே நாணும் வண்ணம் வானுலக மண்டபம் ஒன்று
வழிதவறி இங்கு வந்தது போல் சுயவர மண்டபம் ஒன்று அமைக்க
ஏவலர்க்கு ஆணையிட்டான் நிமித்திகனும் நாள் குறித்தான் 257
பசும்பொன் தூண்கள் நாட்டி பவளத்தால் உத்திரம் அமைத்து
பளிங்கினால் கழிகள் பரப்பி பனி வெள்ளி தகட்டால் மூடி
பொன் சுற்று சுவர் அமைத்து வெண்முத்து மணல் பரப்பி
இந்திரன் சபைக் கூடமாய் எழில் மண்டபம் ஒன்றமைத்தனர் 258
பாவை தத்தை தங்குமிடத்தில் பளிங்கினால் சுவர் அமைத்து
பூ பொன் மாணிக்க மாலைகள் கலந்தங்கு தொங்க விட்டதால்
பூந்தென்றல் மெதுவாய் வீச அசைந்திடும் மாலைகள் எல்லாம்
கருமுகில் இடையே ஒளிரும் மின்னலைப் போல் மிளிரும் 259
ஓவியர் தம் திறமையாலே வரைந்திட்ட ஓவியங்களால்
அகம் புறம் எதுவென்றறியா ஐயத்தை உண்டு பண்ணும்
தளங்களில் இடும் அகிற்புகை தழுவியே விண்ணில் சென்று
வானவர் உலகம் புகுந்து மணம் பரப்பி இளைப்பாறும் 260
வீணை இசை மீட்டுவதில் சரஸ்வதிக்கு நிகரானவள்
இவள் இசையை வெல்வோர் எவரெனினும் மணம் முடிப்பர் – என
மன்னனின் சம்மதம் பெற்ற மாபெரும் வணிகன் சீதத்தன்
முரசறைந்து செய்தி சொன்னான் தத்தையின் திருமணத்தை 261
மதங்கொண்ட களிரை அடக்கி மாகுன்றை கையால் தள்ளும்
காம்பிலி நாட்டு மன்னன் பாலகுமாரன் பங்கேற்க வந்தான்
வில்லேந்தி தழும்படைந்த திண்ணிய தோள்கள் கொண்ட
வாணராசி வேந்தன் வந்தான் தத்தையை தன் மனைவியாக்க 262
அரசர்கள் அடி தொழுது சூழ்ந்து வைரமுடி ஒளியில் பணியும்
அவந்தி நாட்டு அரசன் வந்தான் ஆரணங்கை மணந்து கொள்ள
வீரக் கழல் கால்களில் ஒலிக்க வெற்றி பல கண்ட வீரன்
அயோத்தி மன்னன் வந்தான் அரிவையை அழைத்து செல்ல 263
காந்தர்வதத்தை தன் காலடி பதித்து செல்ல
பனிநீரால் தரை தெளித்து பல மலர்கள் நிலம் பரப்பினர்
தத்தையின் தாதி வீணாபதி தலைவியை நெருங்கி சென்று
எண்வகை மணங்கள் பற்றி எடுத்துரைத்தாள் தத்தையிடம் 264
நிமித்திகன் நாள் குறித்தான் அன்று சீதத்தன் நிதி அளித்தான்
மணமுள்ள பசு நெய் எடுத்து தத்தையின் மெய்யில் பூசி
மலர் அரைத்த குழம்பாலே மாதர்கள் மணக்கத் தடவி
தத்தையின் நல் அழகை தரணிக்கு விளங்கச் செய்தார்கள் 265
பொற்குட கங்கை நீரில் புனுகு அகில் சந்தனம் கலந்து
தத்தையை அமரச் செய்து தாதியர்கள் நீராட்டினார்கள்
கருஞ்சுருள் கூந்தல் திருத்தி நறுமணமலர் தலையில் சூடி
சந்தனக் குழம்பினாலே தத்தையுடல் மணக்கச் செய்தார் 266
ஒப்பனக் கலையில் சிறந்து ஒளிர்கின்ற மகளீர் வந்து
தத்தையை திருமகளாய் திருத்தி தன் இனமே நாணங்கொள்ள
சங்கோடு யாழ் முரசு முழங்க தாதியர்கள் படை போல் சூழ
கேட்போரின் மனம் நெகிழ பண்ணிசைக்க தத்தை வந்தாள் 267
செங்கமல மலரில் வாழும் திருமகளைப் போன்ற தத்தை
புதிய பொற்கொடி ஒன்று அழகென்னும் தளிரை ஈந்து
பொன்நிறப் பூவாய் பூத்து பொற்சிலம்பு ஒலி எழுப்ப
அன்னமாய் மென்நடையில் அடைந்திட்டாள் மண்டபத்தை 268
சந்தனத்தால் தரை மெழுகி சாதி முல்லை மலர்கள் தூவி
பட்டினால் செய்யப்பட்ட பல திரைகள் அங்கமைத்து
வண்ணமலர் மாலைகளை வகை வகையாய் தொங்கவிட்ட
மண்டபத்தில் அவள் அமர்ந்து யாழிசைக்க தொடங்கினாள் 269
இருகரங்கள் யாழை மீட்ட பவளவாய் பாட்டிசைக்க
இலைமலர் பொழில்கள் அங்கு நிலைகுழைந்து உருகி வளைய
தூண்கள் எல்லாம் தளிர் துளிர கின்னரர்கள் மெய் மறக்க
இசையறிந்த கின்னர மிதுனம் எனும் பறவை தரை வீழ்ந்த்து 270
கரும் புருவம் நெற்றி ஏறாது கயல்விழிகள் சற்றும் ஆடாது
மது சிந்தும் தொண்டை விம்மாது முத்துப்பல் வெளிதெரியாது
பவளவாய் பாடியதோ இல்லை யாழ் நாவெடுத்து படியதோ- என
கேட்டவர்கள் தனை மறந்து கிரக்கத்தில் மயங்கினார்கள் 271
தத்தையின் யாழிசை கேட்டு மன்னர்கள் திரும்பிச் சென்றார்
நான்மறை அந்தணர்கள் நாணியே தோல்வியுற்றார்
ஆறு திங்கள் கழிந்தபின் ஆண் சிங்கம் ஒத்த சீவகன்
புத்திசேனன் நண்பனிடம் புகன்றிட்டான் தன் முடிவை 272
நண்பனே நீ சென்று என் தந்தையிடம் சொல்வாய் இன்று
தத்தைமேல் மையலாலே நான் அங்கு செல்லவில்லை
நான் கற்ற கல்வியினை நாடு அறிய செய்வதற்கு
செல்கிறான் சீவகன் என நீ உரைத்து பதில் கொள்வாய் 273
புத்திசேனன் புகன்ற செய்தியை கந்துகடன் கருத்தில் கொண்டு
யாழ் போட்டியில் போட்டியிட தடையில்லை என்றுரைக்கையில்
நாகமாலை அனுப்பி வைத்த ஓலையினை ஓர் மங்கை நீட்ட
கந்துகடன் அதை கைவாங்கி கடிதத்தை படிக்கலானான் 274
கட்டியங்காரன் கடுஞ்சினம் சீவகன் மேல் பாய்ந்துள்ளது
நம்பியை அழிப்பதற்கு நாளெல்லாம் புலம்புகிறான்
சீவகனை நகரை விட்டு நீக்கி அவனை செம்மையாக பாதுகாக்க
நல்லதொரு இடத்துக்கு அனுப்பி வை என்றது மடல் 275
கந்துகடன் செப்பலானான் கடந்த கால நிகழ்வு ஒன்றை
கட்டியங்காரனுடன் கலந்தனர் புலவர்கள் நாடகம் நடத்த
சீவகனை அழைத்தார்கள் அரிவையர்க்கு அழகு செய்ய
ஒப்பனையில் ஒப்பற்ற நம்பி ஒத்து சென்றான் நண்பர்களுடன் 276
ஆடும் அணங்கு அனந்தமாலையை அகிலம் போற்ற அழகு செய்தான்
நங்கையவள் நாணத்துடன் நம்பி மீது காதல் உற்றாள்
நயனத்தில் குறிப்பு எடுத்து நாயகனுக்கு செய்தி சொல்ல
கண்டுகொண்ட கட்டியங்காரன் காட்டுத் தீயாய் கோபமுற்றான் 277
அனந்தமாலை கரம் பற்றி இழுத்து சென்றான் அரண்மனைக்கு
ஆரணங்கோ சீவக நம்பியின் அழகு சொல்லி புலம்பளுற்றாள்
அமைச்சரிடம் அரசன் கேட்டான் அம்மனிதன் விபரம் பற்றி
மந்திரிகள் எடுத்துரைத்தார் சீவகனின் பெருமைகளை 278
கணக்கற்றோர் கை சேர்த்து தூக்க இயலா கல்குண்டை
பூப்போல தோள் தூக்கி பூப்பந்தாய் எடுத்த வல்லோன்
அரசர் படை ஆநிரை மீட்க அடுத்தடுத்து தோல்வி காண
அவ்வேடர் குலம் அழித்து ஆநிரையை மீட்ட வீரன் என்றார் 279
சீவகனின் சிறப்பு அனைத்தும் மந்திரிகள் சொல்லச் சொல்ல
கட்டியங்காரன் கொண்டான் நெஞ்சினிலே சூழ்ச்சியினை
சீவகனை அழிக்க எண்ணி சித்தத்தில் திட்டம் கொண்டான் – என
நாகமாலை கூறியுள்ளாள் படை கொண்டு செல்க என்றான் 280
தந்தையின் வாய் மொழியை புத்திசேனன் வந்து சொல்ல
சீவகனும் புன்முறுவலுடன் புறப்படுவோம் என்றுரைத்தான்
மணிமாலைகள் மார்பணிந்தான் நெய் தடவி கூந்தலிட்டான்
செம்பொன் ஓலை கொண்டு செவிகளில் அணிந்திட்டான் 281
பொதிகைமலை சந்தனத்தை பொன்னுடலில் பூசிக்கொண்டான்
பட்டுத்துகில்கள் கொண்டு பரந்த உடல் அணிந்து கொண்டான்
பளபளக்கும் வாள் உரையை கச்சையோடு கட்டிக்கொண்டான்
செம்புள்ளிகள் நெற்றிகொண்ட வேழத்தின் மேல் வந்தமர்ந்தான் 282
விடுபட்ட அம்பைப் போல விரைந்து செல்லும் தேர்களும்
காற்றென பாய்ந்து செல்லும் கவரிகொண்ட குதிரைகளும்
சூறாவளியாய் சுழலும் வாள்கொண்ட வீரர்களும்
சங்குகள் முழக்கம் இட சீவகன் யாழ் மண்டபமடைந்தான் 283
அரசனின் அறமிழந்த மனம் அழுக்காறில் ஆழ்ந்து ஊற
கனல் கக்கும் விழியாலே சீவகனை சினந்து நோக்க
மலர் தூவிய விரிப்பின் மீது மத யானை போல் நடந்து
புதிய மெல்லணையின் மேலே பொலிவுடன் அமர்ந்தான் நம்பி 284
மலர் கூந்தல் மகளீர் எல்லாம் தேனுண்ணும் வண்டுகள் போல
மணிமார்பன் சீவகனின் மண்டிய பேரழகை பருக
திருமகளை ஒத்த தத்தை சீவகனின் மார்பை ஓலையாக்கி
அடிமை என்று எழுதவேண்டும் என தாதியர்கள் கூறி மகிழ்ந்தனர் 285
அழகினை மத்தாக நிறுத்தி அடங்கா இளமையை கயிறாக்கி
நற்குடிப் பிறப்பென்ற கையால் ஒப்பனை என்னும் கைகயிற்றால்
காமம் என்னும் பெருங்கடலை கலைக்கி கடைகின்ற காளையான
சீவகனை என்று அடைவேன் என ஏங்கினாள் காந்தர்வதத்தை 286
காந்தர்வதத்தை சொல்ல அவள் தோழி வீணாபதியும்
உயர்ந்த ஒரு வீணை நீக்கி வேறு வீணைகள் பல தந்தாள்
வீணை ஒன்றை கையில் கொண்டு அதன் தன்மையை அறிவிக்க
சீவகன் தன் இசையறிவால் தெள்ளிய ஆய்வு செய்தான் 287
கை கொண்ட வீணை அது நீரில் அமிழ்ந்த மரம் என்றான்
மறு வீணை ஒன்றை எடுத்து வாள் வெட்டியமரம் என்றான்
அடுத்த வீணை ஆய்ந்ததிலே இடி கொண்ட மரம் என்றான்
எடுத்த இன்னொரு வீணையோ சிறப்பிழந்தது என்றான் நம்பி 288
அடுத்த வீணை உழவராலே சுட்ட மரத்தின் வீணை என்றான்
கொடுத்த வீணைகள் எல்லாம் குறை கண்டு ஒதுக்கிவிட்டான்
அகிற்புகை ஊட்டப் பெற்ற அழகிய யாழ் தந்தாள் தோழி
அந்த வீணை தத்தை போல அருஞ்சிறப்பு உடையதென்றான் 289
அந்த யாழ் நரம்புகளை அதிநேரம் ஆய்ந்த நம்பி
நரம்பின் முறுக்கை தளர்த்தி நங்கை முடியை எடுத்து காட்டி
நபுலன் கையில் இருந்த நல்முறுக்கு நரம்பு வாங்கி
யாழினில் பொருத்திக் கொண்டு யாழிசைக்க தயாரானான் 290
பொன்மேனி வருடுதல் போல் விரல் தடவி இசை எழுப்ப
யாழிசை இல்லை இது வாய் இசையென வின்னவரும் மயங்க
கல் மண் மரம் உருகிட கின்னரப் பறவைகள் சோர்ந்திட
இசையுடன் ஒன்றிணைந்து ஆலாபனை செய்தான் நம்பி 291
சீவகன் கை யாழ் தடவி தேவையிசை பொழிகையிலே
விண்ணுலக கின்னரார்கள் வீணைகளை விட்டொழித்தார்
வித்தியாதர மக்கள் கேட்டு நெஞ்சுருகி மெய் சோர்ந்தார்
மண்ணுலகோர் மனம் மயங்க சித்தர்கள் போல் இன்பமுற்றார் 292
கருங்கூந்தல் முதுகில் தவழ காதுகளில் குண்டலங்கள் ஒளிர
அழகிய பிறை நூதலில் அரும்பென வியர்வை துளிர
எழில் கழுத்தை இடம் சாயத்து இருகரங்கள் யாழைத் தடவ
இளமயில் போன்ற தத்தை இதுவரை இசையா இசைதந்தாள் 293
தத்தையின் பாட்டிசைக்கு தகுந்தாற்போல் யாழிசைத்தான்
நம்பியின் பாட்டிற்கேற்ப நங்கை யாழ் இசைக்கவில்லை
சீவகனின் யாழுக்கேற்ப தத்தை வாய் பாடவில்லை
மொத்தத்தில் காந்தர்வதத்தை மௌனியானாள் தன்னிலையில் 294
யாழிசையில் பின்னடைந்த யவ்வனத்தாள் காந்தர்வதத்தை
மனமது மிக வருந்த வெட்கத்தால் தலை குனிந்து
வெற்றிகண்ட சீவகனுக்கு பொன்மாலை கையிலேந்தி
ஆண் ஏறு நம்பிக்கு அணிவித்து அடி தொழுதாள் 295
தன் அடி தொழுதவளின் பொன் அடி பாதம் கண்டு
மண்ணுலக மங்கையில்லையிவள் விண்ணூலகின் திருமகளென
முழுமதியின் முகத்தினையும் கமலமொட்டு தனத்தினையும்
கண்களால் விழுங்கியவன் கண் இமைக்க மறந்திட்டான் 296
வேல்விழியாள் தத்தையை வீணையில் சீவகன் வென்றான் – என
இராசமாபுரத்து மக்கள் எல்லாம் நலம் கூறி வாழ்த்துரைக்க
இருள் சூழ்ந்த மனம் கொண்ட நஞ்சு எண்ண கட்டியங்காரன்
அரசர்களை வசை மொழிந்தான் அழுக்காறு கொண்டதனால் 297
மன்னர்கள் முடிவெடுத்தார்கள் போரிட்டு தத்தையை அடைய
பதுமுகன் புத்தி சொன்னான் பெரும் போரை தவிப்பதாற்கு
மோகத்தின் கர்மத்தாலே முடிமன்னர்கள் மறுத்துரைக்க
கொட்டியது பெரும்போர் முரசு போர் முகில்கள் சூழ்ந்ததங்கு 298
சீவகன் உவகையில் உரைத்தான் செங்கொடியாள் தத்தைக்கு
நங்கையே நடுங்க வேண்டாம் நம் படை வெல்லும் என்றான்
பெண்கள்படை முன்னே வந்து தத்தையை சூழ்ந்து நின்று
சீவகன் வெல்லும் வரையில் உங்களை காத்திடுவேம் என்றார்கள் 299
வாட்படைகள் வாளோடு மோத பரிகள் ஒவ்வொன்றும் எதிர்க்க
தேர்களும் ஒன்றோடு ஒன்று இடியென முழங்கி மோத
களிறுகள் களிறை சாய்க்க புழுதியால் பரிதி மறைய
கொம்போடு சங்கொலியும் கொலைக்களம் போல் ஆனதங்கு 300
சீவகனின் தேரின் ஓட்டம் சிறகு கொண்ட பறவையென்பர்
தேர் நின்று அம்பு எய்தால் தேர் உருவம் கண்டேன் என்பார்
மண்ணிலே பார்த்தேன் என்பார் விண்ணிலே பறந்தது என்பார்
புரவிநூல் நன்கு கற்ற நம்பி பனங்காயென சிரங்கள் கொய்தான் 301
சூல் கொண்ட மேகம் கொட்டும் மழை போல அம்பை பெய்தான்
நல்மனங்கொண்ட மன்னர்களின் மணிகொண்ட மார்பை தீண்டி
தீநெஞ்சு வேந்தர்களின் பொன் கவசம் பிளந்து பாய்ந்து
நம்பியின் வில் அம்புகளால் நலிந்தோடின எதிரி படைகள் 302
முகில் மோதும் மின்னல் என மன்னர்கள் மறைந்து போனார்
வேந்தர்கள் படைகள் எல்லாம் காற்றிடை சரகாய் போக
சீவகன் வெற்றிப் படைகள் களத்தினில் களிப்பில் ஆட
தத்தையை அழைத்துக் கொண்டு தன் மனை சென்றான் நம்பி 303
தூய பசும் பொன் கொடுத்து அருகனின் உருவம் செய்தான்
ஊரெல்லாம் மகிழ்ந்து ஆட உற்சவங்கள் நடத்தி வைத்தான்
பெருநிதி அறைத் திறந்து பிறர் மகிழ பொருளை ஈந்தான்
போரினில் உயிரைக் கொன்ற தீவினையை தீர்த்து வைத்தான் 304
மாங்கனி ஒத்த தத்தையின் மங்கல மண விழாவுக்கு
நான்கு நூறாயிரம் கலசங்களில் நல் தயிர் பால் நெய்களோடு
நாடே வியக்கும் வண்ணம் நல் மண வேள்வி செய்ய
ஆநிரைகள் கொண்ட அரசன் நந்தகோபன் நாடி வந்தான் 305
பொதுமக்கள் சுமந்து வந்த முக்கனிகள் காய்யும் கிழங்கும்
தெங்கோடு கமுகு குலையும் சீர்பெரும் வெற்றிலை பெட்டியும்
செண்பகமும் மரிக்கொழுந்தும் செவ்விய முல்லை மல்லிகையும்
வைப்பதற்கு இடம் இன்றி வாடியது ராசமாபுர நகரம் 306
உண்கலம் கழுவும் ஒலியும் உணவு சமைப்போர் கழலொலியும்
இன்னிசை மீட்டும் கருவிகளின் இதமான இசையொலியும்
மறை அறிந்த அந்தணர்கள் வேத வேள்வி குரல் ஒலியும்
மங்கல வாத்தியம் முழங்க சீவகன் தத்தையை மணந்தான் 307
காந்தர்வதத்தையார் இலம்பகம் முடிவுற்றது.
4. குணமாலையார் இலம்பகம்.
காசறு முனிவர் உளம் போல் மாசற்ற வானில் ஞாயிறு
வடதிசை அயனம் செல்ல ஐங்கணை கொண்ட காமன்
போர்கள பாசறை நீங்கிய போர்வீரர்கள் துன்பம் போக
இளவேனில் காலம் தந்து இன்பத்தை அளித்தான் உலகுக்கு 308
இன்னிசை எழுப்பும் குயில்கள் யாழிசை மீட்டும் தும்பிகள்
கன்னியரின் கஸ்தூரி மணம் கமழ்கின்ற மணச் சோலைகள்
அகிற்புகை எழுந்து ஓங்கி ஆதவனின் ஒளியை மறைக்க
இராசமாபுரத்தின் தன்மை இந்திரலோகத்தை ஒத்தது 309
மலை இறங்கும் அருவியென மணிமாலை கொண்ட ஊர்திகளும்
கருமுகில்கள் ஊர்வது போல் கருங்குன்றுகளாய் களிறுகளும்
ஆடை அணிகலங்கள் ஏந்தி அசைந்து வரும் ஆரணங்குகளும்
அந்நகரின் வாயில் முன்னே ஆனந்தத்தில் கூடி நின்றார் 310
சுத்த சுருதி தாளத்தோடு சுண்டியிழுக்கும் பாட்டு ஒலியும்
பண்ணிசையை இன்னிசையாய் பரவிவிடும் யாழ் ஒலியும்
நட்டுவாங்க ஜதியோடு எழும் நாட்டியத்தின் சிலம்பொலியும்
காண்போரின் கரவொலியும் கலந்து கந்தர்வலோகமாகும் 311
சிவந்த நிற தோல் கொண்ட செவ்வாழைத் தோட்டங்களும்
செங்கனிகள் மரம் தொங்கும் மாமரத்தின் தோப்புகளும்
பழம் வெடித்து சுளை சிரிக்கும் பலாமர பெருங் காடுகளும்
பச்சைக் கம்பளம் எடுத்து பாய்விரித்த நகரம் அது 312
மலர் கக்கும் மதுவருந்தி மயங்கி சுற்றும் வண்டுகளும்
மணம் பரப்பும் மலர்களோடு வெண்மணலும் பரவி நிற்கும்
கருங்குயிலும் கிள்ளைகளும் காதினிக்க பாடிசைக்கும்
செம்பொழிலில் குணமாலையும் சுரமஞ்சரியும் அமர்ந்திருந்தார் 313
செவ்வரி படர்ந்த கண்களுடன் செங்கனி ஒத்த இதழ்களுடன்
செவ்விளநீர் நிமிர் தனங்களுடன் செதுக்கிய கல் சிற்பவுடலுடன்
செம்பொன் இடை மேகலையுடன் செவ்வாழைக் கால்களுடன்
சேர்ந்திட்ட முழுசித்திரமாய் செம்மலராய் குணமாலை இருந்தாள் 314
மானின் மருள் விழியுடனும் மாங்கனியின் கன்னத்துடனும்
மதியொத்த முகத்துடனும் மலர் மென்மை உடலுடனும்
மதர்த்தெழுந்த தனத்துடனும் மணி சிணுங்கும் மேகலையுடனும்
மண்ணுலகோர் மயங்கி நிற்கும் மங்கை சுரமஞ்சரி இருந்தாள் 315
மனம் ஒத்த தோழியர்கள் மகிழ்ந்த சொல்லாடல் நடுவே
சுகந்த சுண்ணப் பொடியுடனே தோழியர்கள் இருவர் வர
விண்ணவர் உலகில் மட்டும் இச்சுண்ணம் உள்ளது என
விழிநகைக்க தன் பொடியை குணமாலை கூறிக்கொண்டாள் 316
என் தாதி கொண்டு வந்த மண் மணக்கும் என் சுண்ணம்
ஈடில்லா தரம் கொண்ட பொடி இவ்வுலகில் இது ஒன்று தான்
இப்போட்டியில் தோற்பவர்கள் இன்று நீராடல் விட வேண்டும்
கோடிப் பொன் அருகருக்கு தர சுரமஞ்சரி சூளுரைத்தாள் 317
சுண்ணப் பொடி கைகொண்டு சூழ்ந்திருந்த அக்கூட்டத்திடம்
தாதிகள் இருவரும் சென்று தரம் அதை கேட்டு வேண்ட
இப்பொடியை ஆய்வதற்கும் இதன் தரத்தை சொல்வதற்கும்
இப்புவியில் ஒருவர் உண்டு அவர் இளமாறன் ஜீவகன் என்றார் 318
வாள்பிடித்து திரண்ட கையும் வளமான நூலறிவும் கொண்ட
வீரக்கழல்கள் கால் அணிந்த வேழம் போன்ற சீவகன் நம்பி
தம்பியரும் தோழர்களும் தன்னை சுற்றி சூழ்ந்திருக்க
விண்மீன்கள் புடை சூழ்ந்த முழுநிலவாய் வீற்றிருந்தான் 319
செம்பொற் கொடியனையோர் சுண்ணத்தை ஏந்தி வந்து
சீவகன் அடிதொழுது சுண்ணத்தை எதிரில் வைத்து
சிறந்ததை இதில் ஆராய்ந்து செப்புங்கள் எங்களுக்கு என
செவ்விதழாள் கனகபதையும் மல்லிகையும் காத்திருந்தனர் 320
கோடையில் இடித்து செய்த இச்சுண்ணம் நல்லதென்றும்
குளிர் நாளில் செய்த இப்பொடி குறை சிறிது கொண்டதென்றான்
நீர் உரைத்த இக்குறையை நெஞ்சம் ஏற்க வேண்டுமாயின்
சான்று காட்டி உரையுமென தாதியர்கள் மறுமொழிந்தனர் 321
கண் இமைக்கும் மன்னவரும் கண் இமைக்கா வானவரும்
உன் சொல்லை தட்டமாட்டார் உனக்கெதிராய் உரைக்கமாட்டார்
அன்னவரின் சான்றை எல்லாம் அடியவள் நாங்கள் ஏற்கமாட்டோம்
வானத்தில் பறக்கும் இனத்தின் வாய்மொழியில் சான்றுரைப்பீர் 322
மலர் சொட்டும் மதுவுக்கு மயங்கி ஆடும் வண்டுகளே
தேன் உண்ண பூவுக்குள் தழுவும் தேன் இனங்களே
சுண்ணங்களின் தரம் அறிய தூவுகின்றேன் வானில் பொடியை
சிறந்ததை நீங்கள் உண்டு தேர்ந்தாய்வு செய்திடுங்கள் 323
சோலை மயில் ஒத்த சுரமஞ்சரியின் சுண்ணத்தையும்
கோல மயில் போன்ற குணமாலை சுண்ணத்தையும்
வானத்தில் சிதறி விட சுரமஞ்சரியின் சுண்ணம் விழ
குணமாலை சுண்ணத்தினை சுவைத்தன வண்டும் தேனும் 324
வண்டுகளை நடுவராக்கி சுண்ணத்தின் சிறப்பைக் கூற
வஞ்சியர்கள் விரைந்து சென்று வென்றது குணமாலை என்றார்
முகில் மோதும் ஓசைக் கேட்டு முடங்கிடும் நாகம் போல
சுரமஞ்சரி துன்பம் கொண்டாள் சுண்ணதின் தன்மையாலே 325
சுரமஞ்சரி அடியில் வீழ்ந்து குணமாலை குழைந்து சொன்னாள்
எப்போதும் இருப்பது போல் இனிமையுடன் இருந்திடுவோம்
சீவகன் சொல் தோற்று அவன் என் செவ்வடியை தொடுவதற்கு
நோம்பேற்பேன் என சூளுரைத்து சுரமஞ்சரி விட்டகன்றாள் 326
கன்னிமாடம் சென்றடைந்தாள் கடுஞ்சினத்தில் சுரமஞ்சரி
தாதியர் தாய்க்கு சொன்னார் தலைவிக்கு நேர்ந்தவற்றை
விண் உலவும் சந்திரனை விண்ணை விட்டு நீக்குதல் போல்
ஆடவரை இனி கானேன் கண்டால் உணவு கொள்ளேனென்றாள் 327
தாய் சுமதி சொன்ன சொல் தந்தை குபேரன் செவி நுழைய
மூவுலகும் மதிக்கத் தக்க மாணிக்கமாலையை கையிலேந்தி
கட்டியங்காரன் முன் வைத்து காணிக்கையாய் அதை தந்து
கன்னிமாடத்தெரு வழியே காளயர் செல்ல தடை விதித்தான் 328
இன்பத்தைக் கொடுக்கும் என்று இருவரிடம் எழுந்த விளையாட்டு
இன்பத்தை நீக்கி அங்கே துன்பத்தை புகுத்தியது என
குணமாலை மனம் நொந்தாள் குன்றொத்த நட்பு தொடர்ந்திட
அருகனின் திருவடிக்கு ஆயிரம் பொன் பூவிட்டு தொழுதாள் 329
ஐங்கணையான் அழகை வென்று செம்மலை வடிவம் கொண்ட
தீயைப்போல் வண்ணமுடன் திகழ்கின்ற நேமிநாதரின்
பொன் மதில் சூழ்ந்து நிற்கும் பேரெழில் ஆலயத்திற்கு
எட்டு கோடி பொன்னை மக்கள் நீராட்டுவிழா தானமாக்கினர் 330
சிலம்பணி சிற்றிடை மகளீர் வீரக் கழலணிந்த காளையரோடு
நீர்விளையாடும் ஒலியோ எண்திசையும் ஓசை எழுப்ப
மதவேழம் ஒத்த சீவகன் மனம் நீர் விழாவை விட்டு அகல
காணுதல் தகுதி அல்ல என விலகினான் அவ்விடத்தை விட்டு 331
அந்தணர் அன்னக் குவியலை அங்கு வந்த நாய் கவ்வ
வேதியர் வெஞ்சினம் கொண்டு வேகத்தில் நாயினை வதைக்க
அடிதாளா அப்பைரவன் கதறி அடுத்திருந்த குளத்தில் பாய்ந்து
அதன் உயிரை காத்துக்கொள்ள குளத்தில் நீந்தி சென்றது 332
கள் வழியும் வெள்ளிக்குடத்துடன் கன்னியர் இருவர் தொடர
களிமகன் ஒருவன் அங்கு கள்ளுண்ட மயக்கத்தில் வந்து
அந்தணரை சினந்து நோக்கி அடித்து என் நாயை கொன்றீர் என
அச்சுருத்தி பேசலானான் அந்தணர்கள் அஞ்சி நின்றனர் 333
( களிமகன் : கள் உண்டவன், குடிகாரன். )
சீவகன் விரைந்து வந்தான் களிமகன் சினத்தை வென்றான்
அந்தணர்க்கு ஆறுதல் சொல்லி அவ்விடம் அகலச் செய்தான்
அடியினால் நலிவு கொண்ட அந்நாயிடம் கனிவு கொண்டு
ஐம்பத மந்திரம் சொல்லி அமைதியை அருளச் செய்தான் 334
நல்வினை முற்பிறப்பிலில்லை என நெஞ்சத்தில் வருந்த வேண்டாம்
ஆசை, பாசப் பற்றனைத்தும் அகற்றிடு உன் மனதிலிருந்து
மரணத்தைக் கண்டு அஞ்சி மனதினில் பதற வேண்டாம்
அருகனின் ஐம்பத அமிர்தம் அருந்தினால் வீடடைவாய் ஈன்றான் 335
காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம் மனதில் நீக்கி
பழம்வினை உள்ளத்தில் போக தொடர்வினை உயிரில் நீங்க
பஞ்சமந்திரத்தை நெஞ்சில் பலமுறை பதியச் செய்ய
நாயுடல் விட்டு பிரிந்த உயிர் தேவகதியில் பிறந்து தேவனான து 336
பொன்னகர் கோயில் எல்லாம் மென்மகளீர் தேவியர் ஆனார்
பொன்மணி மாலைகள் சூடி நவமணி மேகலை அணிந்து
ஆண்மயில் சாயல் ஒத்த அரம்பையர்கள் சூழ்ந்திருக்க
அரிமா போன்ற அத்தேவன் அவ்வுலகில் மகிழ்ந்திருந்தான் 337
பஞ்சமந்திரப் பன்னீராலே பாவமாம் அழுக்கைக் கழுவி
நாய் உடல் தன்னை விட்டு நாடிட்ட தேவ சுகத்தை
அவதிக் ஞான ஆற்றலாலே அனைத்தையும் உணர்ந்த தேவன்
சீவகனை காண விரும்பி விண்விட்டு மண்ணில் வந்தான் 338
இளஞ்சுடர் மேனியுடனும் இமையாத விழிகளுடனும்
குற்றமில்லா மணிமுடியுடன் குன்றா ஒளி மாலைகள் கொண்டு
சுதஞ்சண தேவன் அங்கு சீவகன் முன்னே தோன்ற
சீவக நம்பி அவனைக் கேட்டான் செப்பிடுவீர் நீர் யாரென்று 339
நல்வினை என்னில் அற்றதாலே நாய்யுடலில் நலிந்து திரிந்தேன்
பஞ்சமந்திரம் எனக்கு ஓதி பழைவினை அழியச் செய்தாய்
மண்ணுலகில் நாயுடலை விட்டு விண்ணுலக தேவன் ஆக்கினாய்
இவ்வுலகம் உன் அடியின் கீழ் உறங்குமாறு உதவி செய்வேன் 340
எக்குறையும் இல்லை எனக்கு இடர்வரின் உனை நினைப்பேன் – என
சீவகன் மொழிந்து அருள தேவனும் தழுவிக் கொண்டான்
நின் நிழலாய் என்மனம் உனை நீங்காமல் தொடர்ந்திருக்கும்
நீ நினைத்த நாழிகையில் நான் வருவேன் என கூறிச் சென்றான் 341
ஊக்கம் என்னும் ஏர் கொண்டு உடல் ஆகிய நன்நிலத்தை
தவம் என்னும் உழவு செய்து நல்நோன்பு நெல் விதைத்து
நல் ஒழுக்க நீர் பாய்ச்சி ஐம்பொறிகள் வேலி காத்து
வீடென்ற மணிகள் பெற்று சித்தநிலை செல்வோமென்றான் 342
ஆழிபோல் முழங்கி கொண்டு வாயு போல் கடும் வேகத்துடன்
அழிப்பதில் தீயைப் போன்றும் எடுப்பதில் எமனைப் போன்றும்
கால் கட்டு சங்கிலி அறுத்து கட்டுத்தறிகளை முறித்து
பட்டத்து யானை அசனிவேகம் பாய்ந்தது மக்கள் வெள்ளத்துள் 343
மும்மத நீர் விழியில் கொட்ட முழு முனை தந்தங்களோடு
நெடு மலை குன்று போல நிலமகள் அதிர வரும்
களிறினை கண்ட மக்கள் கண் மறைய பதுங்குவது
கதிரவனை கண்ட இருள் கலங்குவதற்கு ஒப்பாகும் 344
சினந்திட்ட வேழத்தைக் கண்டு சிவிகையை சுமந்த ஆட்கள்
பல்லக்கை தெருவில் வைத்து பயந்து பதறி ஓடினார்கள்
குணமாலைக்கு உற்ற தோழி கூவினாள் உதவிக்கு என்று
வந்துதவுவோர் யாரும் இன்றி வணங்கினாள் யானை முன்னே 345
பிடர்வரை தொங்கும் குழலை பொன்மணி கயிற்றால் கட்டி
மாலையை அதன்மேல் சுற்றி செவியணி ஒளியாய் வீச
கவர்ந்திடும் தோற்றத்தோடு காதலால் காக்கும் தோழர்களோடு
வருகையில் நம்பி கண்டான் குணமாலை கொண்ட துன்பத்தை 346
பெருந்தகை சீவக நம்பி பெண்படும் துயர் அறிந்து
பெண் உயிர் காக்கா விட்டால் பேடியாய் இறப்பதே மேல் என
கைக்கடகம் முழங்கை ஏற்றி கச்சினால் ஆடையை கட்டி
பிளிரிந்திடும் களிறை ஒடுக்க பாய்ந்திட்டான் வேங்கை போல 347
படம் விரி நாகத்தின் மேல் பாய்ந்திடும் கருடனைப் போல்
முன் நிற்கும் தோழி மாலையை கொம்புகளால் குத்த குனிய
மலைமேல் பாயும் சிங்கமாக மத்தகத்தின் மேல் குதித்து இடிக்க
சினம் கொண்ட வேழம் சீறி சீவகனை துதிக்கையால் தூக்கியது 348
வீரக் கழல் கால் அணிந்த வேங்கை போல் பாய்ந்த சீவகன்
உரமுற்ற உடலை முறுக்கி வேழத்தின் கொம்பிடை புகுந்து
கால்களின் கீழ் மறைந்து கல் தூண் போன்ற கைகளாலே
களிறினை அடக்கி ஓட்டி கன்னியின் துயரைத் துடைத்தான் 349
கொம்பொடு துதிக்கை மதமும் கொண்ட அக்களிறை திருப்பிய
மாணிக்கத் தூணைப் போன்ற மயக்கிடும் தோளோன் சீவகன்
ஐநூற்று நான்கு தோழர்களும் ஐயனை தொழுது பிரிந்து செல்ல
பூமழை பொழிந்திடமணக்கும் பூம்பொழிலை தனியே அடைந்தான் 350
நெய் விடப் பற்றி எரியும் நெருப்பினில் வாடிய பூவாய்
குணமாலை கொண்ட துயரை தோழிகள் மனதில் மறைத்க
தாய்மையின் தாக்கத்தாலே தாய் அவள் கண்ணீர் துடைத்து
ஆட்டத்தால் சோர்ந்தாள் என அன்னை அவளை அணைத்தாள் 351
கன்னிமாட கூடம் தன்னில் கன்னி மனம் தனிமைக் காண
களிறை வென்ற சீவகனின் கட்டெழில் உருவம் கண்ணிலாட
மலர் அம்புகள் ஐந்தினையும் மாறி மாறி காமன் வீச
மங்கையவள் மனங்குழைந்தாள் மலர்மாறன் நம்பி நினைவில் 352
விழிகள் இரண்டும் ஒளி தளர வெண்கையின் வளை கழல
விம்மும் நெஞ்சு புண்களாக வெந்தீயாய் காமம் பற்ற
தான் வளர்க்கும் தத்தையிடம் தான் பிழைக்க வழியை கேட்க
நின் விருப்பம் இந்நாட்டிலேனில் நவின்றிடு என தத்தை கூறியது 353
செங்கமலம் மேல் அமர்ந்த திருமகள் போன்ற குணமாலை
செவ்விய வாய் தத்தையிடம் தன் மனதை திறந்து விட
பச்சைப் பசும் கிளியோ பாவை நெஞ்சின் செய்தி கொண்டு
பறந்தது விண்ணை நோக்கி சீவகன் மணி மாளிகைக்கு 354
வண்ணங்கள் பல கூட்டி வரைசீலையை எதிர் பதித்து
சித்திரத்தை வரைவதற்கு சீவகன் மனம் தெளிந்து
பாய்ந்து வரும் களிறு கண்டு பாவை மனக்கலக்கம் தனை
குணமாலை முகப் பயத்தினை குறையின்றி தீட்டினானே 355
நங்கையின் நயன நடுக்கத்தை நல்லெழிலாய் தீட்டியவன்
நெகிழ்ந்து விழும் துகிலினை நேத்திரத்தால் தழுவி நோக்கி
கருங்கூந்தலும் சிலம்புகளும் தழுவும் அவள் கால் தடவி
அழகு பொங்கும் ஓவியத்தை ஆரத்தழுவி அணைத்து நின்றான் 356
அண்ணல் அவன் தழுவிக்கொண்டு அவள் அழகில் மயங்கி நிற்க
குணமாலை மனக் கவலையை கொண்டு வந்த தூது தத்தை
சிற்றிடை ஒடிசலுடனும் சின்ன யானை நடையுடனும் வந்த
சித்திரப் பாவை போன்ற தத்தையை தத்தை கண்டது 357
செவி அமைந்த குண்டலங்கள் செவ்வான ஒளியை சிந்த
மெல்லிடை அணிந்த மேகலை மெல்லிசையாய் ஒலி எழுப்ப
வட்ட வடிவ அழகு முகம் வான் நிலவின் தன்மையுடன்
வரும் தத்தையை கண்டு வாடியது தத்தை மனம் 358
கள் சிந்தும் கண் களிப்பும் காலடியின் கிண்கிணியும்
கருங்கூந்தல் பின் தவழ காமம் அது முன் நழுவ
கண்கவரும் மன்மதனாம் களிறை வென்ற நம்பியை காண
காந்தருவதத்தை வந்தாள் கண்டிட்டாள் அவன் ஓவியத்தை 359
ஓவியத்தில் ஒளிர்ந்த உரு யார் என்று தத்தை கேட்க
உருவத்தை வரைந்த நம்பியோ இயக்கி என சொல்லுதிர்க்க
பூந்துகிலும் குழலும் பொதிந்த புதியதோர் இயக்கி இவள்
உன் மனதை கவர்ந்தவள் என ஊடல் கொண்டாள் தத்தையங்கு 360
விற்புருவம் நெற்றி ஏற வேல் விழிகள் கனல் கக்க
முத்து முத்தாய் முகம் வியர்க்க முழுமேனி மெல்ல அதிர
சினம் கொண்ட தத்தையின் சினம் தணிக்க எண்ணியவன்
ஈருடல் ஓர் உயிர் நாம் ஏன் உனக்கு கோபம் என்றான் 361
குணமாலை உருவம் பார்த்து குணம் கொண்ட கோபத்தால்
ஊடலினால் உளம் சோர்ந்து தத்தை சீவகனை விட்டகல
தூது வந்த தத்தையோ துளிர்த்த மன மகிழ்ச்சியினால்
சீவகனின் அடிதொழுது செவ்வடிகள் வாழ்க என்றது 362
பைங்கிளி வந்த காரணம் படை கொண்ட நம்பி கேட்க
தலைவியின் காதல் நெஞ்சம் தலைவனுக்குண்டா என்றறிய
தூதாக என்னை அனுப்ப அவள் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு
நின் மாளிகை நாடி வந்தேன் நலம் பயக்க சொல் என்றது 363
பொன்மலை தானம் தந்து பசும் வயல் நகரம் ஈந்து
குன்றொத்த தோள்களாலே குணமாலையை தழுவுவேனென்றான்
தூதுதத்தையோ நம்பியிடம் துள்ளியமாய் எழுதி கேட்க
கடிதமும் கணையாழியையும் கனிவுடன் தந்தான் தத்தைக்கு 364
நூலறிவு தெளித்து வைத்த நுண்ணிய வரிகள் கொண்ட
சீவகன் கடிதம் கண்டு சிந்தையில் மகிழ்வு கொண்டாள்
பாலினில் தேனைக் கலந்து பருகிடும் இன்பம் அனைத்தும்
படிந்தது பாவை விழிகளில் உதிர்ந்தது நீர் உவகையாலே 365
செவிலித்தாய் வந்து சேர்ந்தாள் செவி தாங்கா செய்தியுடன்
மாமன் மகன் வந்துள்ளான் மனைவியாய் உன்னை கேட்டு
நங்கையே உன் பெற்றோர்கள் சேர்ந்து நகைமுகை விருந்து படைத்து
சம்மதம் கூறியுள்ளார் உனைத் தாரமாய் தருவதற்கு 366
( நகைமுக விருந்து : உடன்பாடு, சம்மதம். )
இருசெவிகள் பொத்திக் கொண்டாள் இளம் நெஞ்சில் களக்கமுற்றாள்
இணையற்ற களிறை வென்று எனைக் காத்த சீவகன் தவிர
எவரையும் மனம் ஏற்கமாட்டேன் எந்நிலை எனக்கு வந்திடினும்
உயிரினை விடுவேன் இல்லை உயர் தவம் ஏற்பேன் என்றாள் 367
செவிலித்தாய் தாய்க்கு சொல்ல செல்லத்தாய் பதியிடம் பகர
குபேரமித்திரன் மகிழ்ந்து குணமாலை உள்ளம் கவர்ந்த
சீவகனே தன் மகளுக்கேற்ற சிறந்த ஒரு கணவன் என்று
செழுமிய உள்ளத்துடன் திருமணத்தை முடிப்போம் என்றான் 368
கற்றார், கட்டுரை, கவிவல்லார் முத்திறம் வல்லார் நால்வரை
கண்மணி மகளுக்கு மணம் பேச கந்துக்கடன் இல்லம் அனுப்ப
கனகமணிச் செப்புகளில் பொருளும் வெற்றிலை பாக்குடன் பல ஏந்திசெல்ல
கற்பகமரம் போன்றீரே வருக என கந்துக்கடன் வரவேற்றான் 369
ஸ்ரீ தேவி அழகு ஒத்த மகள் குணமாலை எங்கள் செல்வி
திருமால் நிகர் சீவகனுக்கு திருமணம் பேச வந்தோம் என
நால்வரின் கூற்றைக் கேட்டு நம்பியின் பெற்றோர் மகிழ்ந்து
நல்லதொரு மணநாள் குறித்து நாடினார் குபேரமித்திரன் இல்லம் 370
சுந்தர முரசுகள் முழங்க சுப முழவும் உடன் ஒலிக்க
வெண்சங்கும் வளைகொம்பும் வீதியெல்லாம் ஒலிநிரப்ப
கரைமோதி ஒலி எழுப்பும் கடலலை போல் ஆர்ப்பரிக்க
மாநகர் மாந்தர் வாழ்த்த மணந்திட்டான் குணமாலையை 371
பசும் பொன் நகைகளுடன் பைங்கொடியர் எழுநூறு பேரும்
செம்பொன் ஒரு கோடியும் செழித்த நிலம் ஐந்து ஊரும்
செல்லமாய் வளர்த்த மகளுக்கு சீதனமாய் அள்ளித்தந்து
சிறப்புடன் அனுப்பி வைத்தான் குபேரமித்திரன் குணமாலையை 372
பாலாடை போன்ற மென்மேனி பவளமாய் சிவந்த வாய்
தண்மதி போல் முகத்தினிலே தவிக்க வைக்கும் கருவிழிகள்
மூங்கிலொத்த மென் தோள்கள் முக்கனி சுவை இரு தனங்கள்
அத்தனையும் சித்திரம் போல் அழகில் நின்றாள் குணமாலை 373
நான்கிதழ்கள் சுவை அருந்த நாற்கரங்கள் உடல் தழுவ
இரு உடல்கள் ஓருடலாய் இணைந்து குழைந்து உழல
ஐங்கணையான் மலரம்புகள் அடைமழையாய் பொழிந்திருக்க
சீவகனும் குணமாலையும் சேர்ந்திருந்தார் பஞ்சணையில் 374
நீர் விளையாட்டு நாளில் நிறை மதம் கொண்ட வேழம்
சீவகன் இரு கரங்களிடையே சிக்குண்டு பின்னே செல்ல
நாணிய யானை அசனிவேகம் நெய் கவளம் சோறு நீக்கி
நெஞ்சத்தில் சினத்துடனே நின்றது உணவு போக்கி 375
களிறு கொண்ட நிலையறிந்து கட்டியங்காரன் வந்தான்
காரணம் பாகனைக் கேட்க பாகனோ நடந்ததை பகர்ந்தான்
ஆநிரை மீட்ட கோபத்தாலும் யாழினில் வென்ற தாபத்தாலும்
கட்டளையிட்டான் கட்டியங்காரன் சீவகநம்பியை கைது செய்ய 376
பிறை சிரம் கொண்ட சிவனும் இடம் பெற்ற உமையும் போல
இளங்கொடியாள் குணமாலையும் எழிலுருவன் நம்பியும் இருக்க
சிங்கத்தை இகழ்ந்து சூழும் சிறுநரிகள் கூட்டம் போல
கட்டியங்காரனின் வீரர்கள் சூழ்ந்தனர் சீவகன் மாளிகையை 377
முப்புரம் எரித்த சிவன் போல் முகமது தீயாய் சிவக்க
வீரக் கழல் அணிந்து வென்றிடும் வில்லையை ஏந்தி
கட்டியங்காரன் ஆயுள் கடந்தது இன்றோடு என்று
நந்தட்டா தேரைப் பூட்டு நசுக்குவோம் அவனை என்றான் 378
தந்தையும் தாயும் வந்தனர் தனையனை நோக்கிச் சொன்னர்
மன்னனோடு மாறுபட்டால் மாபெரும் பகையே கிட்டும்
சினத்தினை ஒதுக்கித் தள்ளி சிந்தித்து செய்வாயானால்
மன்னனின் கோபம் நீங்கும் மகனே உனக்கு நலமே கிட்டும் 379
அச்சணந்தி ஆசிரியருக்கு அன்றளித்த வாக்கை எண்ணி
சினத்தினை சினந்து ஒதுக்கி சிந்தித்து முடிவு செய்து
பெற்றோரின் வார்த்தை தனை பெரிதாக மனதில் ஏற்று
கச்சினால் கட்டிய கைகளோடு கடந்திட்டான் வீரர்கள் சூழ 380
பேதை பருவ மகளீர் விளையாட்டை விட்டு பார்க்க
பெதும்பை பருவ மகளீர் சிலம்பொலிக்க வந்து பார்க்க
மங்கை பருவ மகளீர் பந்தாட்டம் நிறுத்திப் பார்க்க
மாவீரன் சீவக நம்பி மதயானை போல சென்றான் 381
மடந்தைப் பருவ மகளீர் மனம் கனந்து மெய் சோர
அரிவைப் பருவ மகளீர் அம்பு விழிகள் நீர் சொரிய
தெரிவை பருவ மகளீர் தெருவில் வந்து ஓலமிட
பேரிளம் பெண்கள் எல்லாம் பேயறைந்தார் போலிருந்தார் 382
( பேதை : 5 முதல் 7 வயது. பெதும்பை : 8 முதல் 11 வயது. மங்கை : 12, 13 வயது
மடந்தை : 14 முதல் 19 வயது. அரிவை : 20 முதல் 25 வயது. தெரிவை : 26 முதல்
31 வயது. பேரிளம் பெண் : 32 வயதுக்கு மேல். )
தீவினை வந்து உறுத்த சிறைபட்டான் என்பார் சிலர்
கூற்றுவனை அழைத்த மன்னன் குலம் அழியும் என்றார் சிலர்
குணமாலை தத்தை செய்த நற்தவத்தில் பயனில்லை என்பார்
அறங்காக்கும் கடவுளுக்கு அழியாப் பழி என்பார் சிலர் 383
பன்னிரு கோடி பொன் எடுத்து கந்துக்கடன் சென்றான் அவைக்கு
கட்டியங்காரனிடம் காணிகையாக்கி அடி பணிந்து சொன்னான்
மதகளிறு மகளீரைக் கொன்றால் மன்னன் உமக்கு பழியே மிஞ்சும்
மன்னித்துவிடு என் மகனை அறியாமையால் செய்த தவறை 384
கட்டியங்காரன் சொன்னன் கள்வனைப் போல் கொல்வேன் என
கந்துக்கடன் திரும்பி விட்டான் கடும் நடுக்க நெஞ்சுடனே
தாயவள் கதறி அழுதாள் தனியே வந்த பதியைக் கண்டு
முன்புறைத்த முனியின் சொல்லை மனைவிக்கு கூறலானான் 385
ஒப்பற்ற முனிவரை தொழுது ஒன்பது முறைகளில் அழைத்து
நால்வகை உணவுகள் படைக்க அம்முனிவர் விரும்பி உண்ண
நம் மனக்குறையை நீக்க நம் வாரிசின் பிறப்பைக் கூறி
பிறப்பொடு அவன் துறவு வரை நடப்பதை முனிவர் சொன்னார் 386
( 9 முறைகள் : எதிர் கொளல், இடம் அளித்தல், கால் கழுவுதல், அடி போற்றல், அர்ச்சித்தல், இனிய மொழி கூறல், தூய மனத்தவராதல், தூய உடலினராதல், வினை விலக வேண்டுதல். 4 வகை உணவு : உண்பன, தின்பன, உறுஞ்சுவன, பருகுவன. )
நண்பர்கள் திட்டமிட்டனர் நம்பியை மீட்டுக் கொணர
தத்தையோ தியானம் செய்தாள் தலைவனின் துன்பம் விலக
கட்டியங்காரன் உயிர்க்கு காலம் இன்னும் வரவில்லை என
சீவகன் உள்ளம் சிந்தித்து சுதஞ்சணை நினைத்தான் மனதில் 387
சீவகன் இன்னல் தன்னை அவதிக் ஞானத்தால் சுதஞ்சணன் அறிய
மேகத்தை ரதமாய் கொண்டு ராசமாபுரத்தை அடைந்தான்
கார்முகில் பெரிதும் திரள கதிரவன் பின்னே மறைய
கடல் நிலம் புகுந்தது போல் பொய்யான காட்சி அமைத்தான் 388
சீவகன் நம்பியைக் கண்டான் செந்தோளால் கட்டியணைத்தான்
மார்புரத் தழுவிக் கொண்டு வானத்தில் பறந்து சென்றான்
காந்தர்வதத்தைக் கண்டாள் கணவன் வானில் செல்லுவதை
மனம் மகிழ வாழ்த்தினாலும் இனி காண்பது எப்போதென்றாள் 389
மைத்துனன் மதனன் என்பான் மன்னனின் ஆணை ஏற்று
சீவகனை கட்டி இழுத்து காண்போர்கள் வருந்த வந்தான்
சுதஞ்சணன் கொண்டு சென்றான் சூட்சமம் அறியா மதனன்
நம்பியை காணாமல் பதறி நால்புறமும் தேடச் செய்தான் 390
மன்னனின் சினத்தில் தப்ப மர்மமாய் ஒருவனைத் தொடர்ந்து
வாளினால் வெட்டிக் கொன்று வடிவம் தெரியாமல் சிதைத்து
கட்டியங்காரனிடம் சென்று சீவகனைக் கொன்றோம் என்றான்
மன்னனும் மனம் மகிழ்ந்து மதனனுக்கு சிறப்புகள் செய்தான் 391
குணமாலையர் இலம்பகம் முற்றிற்று.
No comments:
Post a Comment